ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நேரத்தில்.. ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா!
சென்னை: பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் சசிகலா காஞ்சிபுரம் மாவட்டத்தில் சர்க்கரை ஆலையை 450 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாகக் கொடுத்து வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தபோதுதான் 450 கோடி ரூபாயை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலை வாங்கி இருக்கிறார் சசிகலா.
காஞ்சிபுரத்தில் பத்மாவதி சுகர்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கிய சர்க்கரை ஆலையை வாங்க, 120 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த ஜூலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் சர்க்கரை ஆலைக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

மேலும் பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான ஹிதேஷ் ஷிவ்கன் படேல், அவரது தந்தை ஷிவ்கன் படேல், சகோதரர் தினேஷ் படேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டிய ராஜ் மற்றும் தலைமை நிதி அதிகாரி வெங்கட பெருமாள் முரளி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் சர்க்கரை ஆலையை வாங்குவதற்கு 450 கோடி ரூபாய் பழைய நோட்டுகளைப் பயன்படுத்தப்பட்டதாக ஹிதேஷ் ஷிவ்கன் படேல் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடுத்து பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரிக்க, மறுபுறம் வருமான வரித்துறை அந்த சர்க்கரை ஆலையை பினாமி சொத்து என்று அறிவித்து, சசிகலாவை அதன் உண்மையான உரிமையாளராக வழக்கில் குறிப்பிட்டது வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது. 2017 நவம்பரில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனையில், அந்த சர்க்கரை ஆலை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு சில வாரங்களில் சசிகலா அந்த சர்க்கரை ஆலையை 450 கோடி ரூபாய்க்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரொக்கமாகக் கொடுத்து வாங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து மோசடியான கடன் பெற்றது, வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை மற்ற நிறுவனங்களுக்குத் திசை திருப்பியது, மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சந்தேகத்திற்குரிய வகையில் ரொக்கப் பணத்தை வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும் விஸ்வரூபம் எடுத்தன.
இந்த நிலையில், பத்மாவதி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு ஏற்கனவே செக் வைக்கப்பட்டுள்ள நிலையில் சர்க்கரை ஆலை விவகாரத்தில் தற்போது சசிகலா மீண்டும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தபோதுதான் 450 கோடி ரூபாயை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை சசிகலா வாங்கி உள்ளார்.
சசிகலா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா, அதிமுகவில் இணைய முயற்சித்து வரும் சூழலில், இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications