சின்னம்மா ரிட்டர்ன்ஸ்! இனிமே நாங்க தான்.. அதிமுகவில் அடித்துக் கொள்ளும் தலைகள்! சசிகலா செய்த சம்பவம்
சென்னை: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் அரசியல் போராட்டம் வெளிப்படையாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி அணிகள் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து உரிமை கோரியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக கொறடவாக யாரை சபாநாயகர் நியமிக்கப்போகிறார் என்ற கேள்வி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்ததையடுத்து, கட்சிக்குள் அதிருப்தி வெடித்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இணைந்து தனி அணியாக செயல்பட தொடங்கினர்.

சட்டப்பேரவையில் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரையும் தேர்வு செய்ததாக அவர்கள் அறிவித்தனர். மறுபுறம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தரப்பில் சட்டப்பேரவை குழுத் தலைவராக தானே தொடருவதாகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாக நியமித்ததாகவும் அறிவித்திருந்தார்.
அதிமுக மோதல்
இந்த மோதல் உச்சத்தை எட்டியது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது. அப்போது எஸ்.பி. வேலுமணி அணி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதையடுத்து, சி.வி. சண்முகம், வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதன் பின்னர், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையை சண்முகம் தரப்பு கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி
இந்த விவகாரம் குறித்து பேசிய சி.வி. சண்முகம், "அதிமுக அலுவலகத்தை கோயிலாக நினைக்கிறோம். எந்த பாதிப்பும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம். சட்டப்படி உண்மையான அதிமுக தொண்டர்கள் நாங்கள்தான் என்பதை நிரூபித்த பிறகே அங்கு செல்வோம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பேரவைத் தலைவரை சந்தித்து, "அக்ரி கிருஷ்ணமூர்த்திதான் அதிகாரப்பூர்வ கொறடா. தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.
சிவி சண்முகம்
அதேபோல், சண்முகம் அணியை சேர்ந்த சி. விஜயபாஸ்கர் மற்றும் காமராஜ் ஆகியோரும் பேரவைத் தலைவரை சந்தித்து, "எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. எனவே வேலுமணியை சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், விஜயபாஸ்கரை கொறடாவாகவும் அங்கீகரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். இதனால் தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ சட்டமன்றத் தலைவர் யார்? கொறடா யார்? என்ற கேள்வி மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
எம்ஜிஆர் மாளிகை
இதே நேரத்தில், அதிமுக அரசியலில் மீண்டும் களம் இறங்க சசிகலா தரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை பயன்படுத்தி மீண்டும் கட்சியின் கட்டுப்பாட்டை கைப்பற்ற சசிகலா ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
சசிகலா
மேலும், பழனிசாமி தரப்பு ஆளுநரை சந்தித்து, "தவெக அரசு அமைப்பதில் குதிரை பேரம் நடந்துள்ளது" என்ற புகார் மனு அளிக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் தற்போது உருவாகியுள்ள இந்த அதிகாரப்போர், வெறும் இரு அணிகளின் மோதலாக மட்டுமல்லாமல், கட்சியின் எதிர்கால தலைமை யாரிடம் செல்லும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications