சசிகலா வருகை... இன்றுதான் எங்களுக்கு தீபாவளி -அமமுக தொண்டர்கள் உற்சாகம்
நான்கு ஆண்டுகாலமாக தீபாவளியே கொண்டாடவில்லை இன்றைய தினம்தான் எங்களுக்கு தீபாவளி என்று கூறியுள்ளனர் அமமுக தொண்டர்கள்.
சென்னை: சசிகலா பெங்களூரு சிறையில் இருந்த நான்கு ஆண்டுகாலமும் நாங்கள் தீபாவளி கொண்டாடவில்லை. அவர் தமிழகம் திரும்பியுள்ள இன்றைய தினம்தான் எங்களுக்கு தீபாவளி அதனால்தான் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறோம் என்று உற்சாகத்துடன் கூறியுள்ளனர் அமமுக தொண்டர்கள்.
சசிகலா இன்று காலையில் பெங்களூருவில் இருந்து கார் மூலம் சென்னைக்கு கிளம்பினார். செண்டை மேளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து வழியனுப்பி வைத்தனர். ஏராளமான கார்கள் புடைசூழ தமிழக எல்லைக்குள் நுழைந்தார் சசிகலா.
இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம் என்பது போல பூரண கும்ப வரவேற்பு கொடுத்து அசத்தி விட்டனர் அமமுகவினர். சசிகலாவின் வருகையை திருவிழா போல கொண்டாடி தீர்த்த தொண்டர்கள் இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி என்று தெரிவித்துள்ளனர்.
நமது ஒன் இந்தியா செய்தியாளர்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நான்கு ஆண்டுகள் கழித்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ வரவேற்பு கொடுத்தோம் என்று ஒரு தொண்டர் தெரிவித்தார்.
சசிகலாவின் வருகையை பல்லாயிரம் வாலா பட்டாசு வெடித்து கொண்டாடினோம். கடந்த நான்கு ஆண்டுகாலமாக எங்களுக்கு தீபாவளி இல்லை இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி பண்டிகை என்று உற்சாகத்துடன் கூறினார் அந்த தொண்டர்.
ஓசூர் முத்துமாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட சசிகலாவிற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வேத மந்திரங்கள் முழங்க பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது என்று கூறினார் மற்றொரு தொண்டர்.