'திருப்பம்..' சசிகலா மீது புதிய வழக்குகளை பதிவு செய்யும் தமிழக அரசு? ரூட் போட்டு கொடுத்த ஆதரவாளர்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்படும் சசிகலா, சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். இந்தச் சூழலில் அவர் மீது தமிழ்நாடு போலீசார் புதிய வழக்குகளைப் பதிவு செய்யலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, கடந்த 4 ஆண்டுகள் பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார்.
தண்டனை காலம் முடிந்ததைத் தொடர்ந்து அவர் தேர்தலுக்கு முன்பாக விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் சசிகலா முக்கியமான நபராக இருப்பார் என்று அனைவராலும் கருதப்பட்டது.

ஒதுங்கிய சசிகலா
இருப்பினும், சட்டசபைத் தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருந்த போது, அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது சசிகலா ஆதரவாளர்களுக்கும் டிடிவி தினகரனுக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்தது. அதேபோல சசிகலாவின் இந்த முடிவால் டிடிவி தினகரனும் கடும் ஏமாற்றத்தைச் சந்தித்தார். தேர்தலுக்கு முன் சசிகலா அரசியல் வருகை கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என இபிஎஸ் பாஜகவுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே சசிகலா இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.
Recommended Video

ஆடியோ அரசியல்
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவால் சட்டசபைத் தேர்தலில் வெல்ல முடியவில்லை. அதிமுக கூட்டணியால் 75 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. சில மாதங்கள் தீவிர அரசியல் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா, அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு தனது அரசியல் அத்தியாயத்தை மீண்டும் தொடங்கினார். அப்போதைய கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பேன் என்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு அங்கிருந்து தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வேன் என்று கூறியிருந்தார்.

அதிமுக படுதோல்வி
இருப்பினும், சசிகலாவுக்கு எதிராகவே தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வந்த அதிமுக தலைவர்கள், இபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையில் கட்சி வலுவாக உள்ளதாகவே தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அதிமுகவின் தற்போதைய நிலையை உணர்த்துவதாக இருந்தது. 140 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்குத் தேர்தலில் அதிமுக கூட்டணி 220 ஒன்றிய இடங்களை வென்றது. அதிமுக தனியாக 212 இடங்களில் மட்டும் வென்றது.

ஜெ நினைவிடம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி சசிகலா அரசியல் வருகைக்குப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் காலை அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றார். அங்கே ஜெயலலிதா நினைவிடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியபோது சசிகலா கண்ணீர் விடத் தொடங்கினார். இதையடுத்து கண்களை கர்ச்சீப்பால் ஒற்றிக் கொண்ட அவர் அப்படியே சமாதி மீது விழுந்து கும்பிட்டார்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு
சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா இன்று தான் ஜெயலலிதா நினைவிடம் சென்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்தபோதே, அவர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வழிபடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பராமரிப்பு பணிகள் இருப்பதாகக் கூறி ஜெ சமாதியையே மூடியது அப்போதைய அதிமுக அரசு. தனது அரசியல் வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று சசிகலா கூறும் மெசேஜாகவே இது பார்க்கப்படுகிறது.

அதிமுக கொடி
சசிகலா இன்றைய தினமும் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே ஜெ நினைவிடம் சென்றார். மேலும், இன்று சசிகலா வீட்டில் இருந்து புறப்பட்டது முதல் அவர் சமாதிக்குச் சென்று வழிபட்டுவிட்டுத் திரும்பியது வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அவருடன் இருந்தனர். சசிகலா செல்லும் இடங்களில் எல்லாம் குவிந்து இருந்த ஆதரவாளர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.

கொரோனா வழிகாட்டுதல்கள்
தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், சசிகலா உட்பட அவரது ஆதராளர்கள் பெரும்பாலும் யாரும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உட்பட எந்த விதமான கொரோனா வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை. கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், சசிகலாவின் இன்றைய பயணத்தில் அவை அனைத்தும் காற்றில் பறந்தன.

அதிமுக தலைவர்கள்
இதற்கு முன் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற போது கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதாக அக்கட்சியின் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல திமுக அரசைக் கண்டித்துக் கடந்த ஜூலை இறுதியில் அதிமுகவினர் நடத்திய போராட்டத்திலும் கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதாக எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கிய தலைவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதிய வழக்குகள்
இந்தச் சூழலில் இன்றைய தினம் சசிகலாவும் அவரது ஆதரவாளர்களும் எந்தவொரு கொரோனா வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை என்பதால் அவர்கள் மீது இதேபோல கொரோனா வழிகாட்டுதல்களை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தலைவர்கள் போலவே சசிகலா மீதும் திமுக அரசு வழக்குப்பதிவு செய்யுமா அல்லது அமைதி காக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications