ஸ்டாலின் மேல எனக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை.. திமுகவை சரமாரியாக விளாசிய சசிகலா!
சென்னை: "கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் சரியான நடவடிக்கை எடுப்பார் என எனக்கு நம்பிக்கை இல்லை" என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா இன்று தொண்டர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, விரைவில் தான் தொடங்க உள்ள சுற்றுப்பயணம் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணி 90 சதவிதம் நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். தற்போது அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்." என்றார்.
மேலும் பேசிய அவர், "கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று அதிமுக காலத்தில் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த போது, ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் அதன் பிறகு கள்ளச் சாராய மரணங்களே நிகழவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
காவல் துறையை இயக்குவோர் சரியாக இல்லை. இது போன்ற அரசாங்கம் தமிழகத்தில் இதுவரை இருந்ததில்லை. இதை திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் இதுவரை சரிவர பொருட்கள் வழங்கப்படவில்லை. கடந்த 2 மாதமாக ரேஷன் விநியோகம் மிகவும் மோசமாக உள்ளது.
தேர்தல் நடைமுறை வந்ததால் ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்ய முடியவில்லை என அமைச்சர் கூறி இருக்கிறார். மக்களவைத் தேர்தல் வரும் என்பது அரசுக்கு முன்பே தெரியாதா? பிறகு எதற்கு அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.இது சாக்கு போக்குச் சொல்லும் விஷயம் இல்லை. இதனால் 1 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் பாதிக்கிறது. இதை எல்லாம் கேட்பதற்கு சரியான ஆள் சட்டப்பேரவையில் இல்லை.
தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்ல முடிவை தர வேண்டும். திமுக அரசு நடத்திவரும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை மீதும், அது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதில் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்சினைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ, அதுபோல நீட் தேர்வு விவகாரத்திலும் நிரந்தர தீர்வை பெற்றுத் தந்திருப்பார். நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்." என்றார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, "திமுகவினர் மக்களையும் வாக்களிப்பவர்களையும் பிச்சைக்காரர்களாகத் தான் நினைக்கிறார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications