சசிகலாவுக்கு வந்த ஆவேசம்.. "இந்த திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இப்படித்தான்".. முக்கிய கோரிக்கை
எம்ஜிஆர் சிலை உடைப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: எம்ஜிஆரின் சிலையை அப்புறப்படுத்திய விஷமிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும், சிலைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சசிகலா முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
என்ன ஆனது என்று தெரியவில்லை.. தமிழகத்தில் இத்தனை காலமும் பெரியார் சிலைகளை உடைத்து கொண்டும், அவமரியாதையை செய்தும் கொண்டுமிருப்பதே விஷமிகளின் வழக்கம்.
இப்போது திடீரென எம்ஜிஆர் பக்கம் பாய்ந்துள்ளனர்.. வழக்கமாக தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும்..
தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை பெயர்த்தெடுத்த மர்மநபர்கள்.. கடும் கோபத்துடன் எடப்பாடி பழனிச்சாமி வார்னிங்
இரும்பு தடுப்புகள்
அந்த வகையில்தான், தஞ்சையில் வடக்கு வீதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும் இரும்பு தடுப்புகள் உள்ளன.. இந்த சிலையை வைத்து பல வருடங்கள் ஆகிறதாம்.. மார்பளவுள்ள சிலை என்றாலும், எம்ஜிஆரின் பிறந்த நாள், நினைவு நாட்களில், கட்சி தொண்டர்கள் திரண்டு வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.. அப்படித்தான் சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் அன்றும் மரியாதை செலுத்தப்பட்டது.
உடைக்கப்பட்ட சிலை
இந்நிலையில், இன்று காலை அந்த வழியாக சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. எம்ஜிஆர் சிலையை காணவில்லை என்று திடீரென தகவல் பரவியதும், அதிமுகவினர் திரண்டு வந்தனர்.. அப்போதுதான், சிலை உடைக்கப்பட்டு, பீடத்தின் பின்பக்கம் கீழே விழுந்து கிடந்துள்ளதை பார்த்துள்ளனர்.. மறுபடியும் அந்த சிலையை அதே இடத்தில் வைத்த தொண்டர்கள், இது தொடர்பாக தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் தந்தனர்..
விசாரணை
போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சேகர் என்பவர்தான் இந்த காரியத்தை செய்தது தெரியவந்தது.. சேகர் குடிபோதையில் வந்து சிலையை உடைத்துள்ளார்.. சிசிடிவி காட்சி மூலம் கையும் களவுமாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. எனினும் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டது அதிமுக தலைவர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சமூக விரோத செயல்
அதிலும், தற்போது திமுக ஆட்சி நடப்பதால், விவகாரம் திசை திரும்பியுள்ளது.. அதிமுக பொதுச்செயலாளர் என சொல்லிக்கொள்ளும் சசிகலா இது தொடர்பாக ஒரு கண்டன அறிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்: "திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது முதல், தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்துவது, அவமரியாதை செய்வது போன்ற சமூக விரோதச் செயல்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.
கண்டனம்
மேலும் தமிழகத்தில் இது போன்று சட்டம் ஒழுங்கை பாதிக்கின்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது கவலையடையச் செய்கிறது. தஞ்சாவூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலையை அப்புறப்படுத்திய செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எம்ஜிஆர், தனது தன்னலமற்ற செயல்களால், எண்ணற்ற ஏழை-எளிய மக்களின் நம்பிக்கை நாயகனாக, இன்றைக்கும் அனைவருடைய உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உன்னத தலைவர்.
தமிழக அரசு
இது போன்ற விரும்பத்தகாத செயல்களை செய்து எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களான கோடான கோடி உடன் பிறப்புகளின் மனதை காயப்படுத்திட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். எம்ஜிஆரின் சிலையை அப்புறப்படுத்திய விஷமிகளுக்கு உரிய தண்டனையை வழங்குவதுடன், தலைவர்களின் சிலைகளை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.