சென்னையில் நாளை காலையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் சசிகலா விசிட்- நிவாரண உதவி வழங்குகிறார்!
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா நாளை காலை பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அப்போது நிவாரண உதவிகளையும் சசிகலா வழங்க உள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் உச்சமாக சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கியது. சென்னையில் மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதேநேரத்தில் அரசியல் கட்சிகளும் ஆதாயத்துடன் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வெள்ள பாதிப்பு பகுதிகள் அனைத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். டெல்டா மாவட்டங்களையும் பார்வையிட உள்ளார்.

களத்தில் அரசியல் கட்சிகள்
இன்னொரு பக்கம் அதிமுக தலைவர்கள், தமிழக அரசை கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். பாஜக, தேமுதிக தலைவர்களும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

சசிகலாவுக்கு அழைப்பு
இதில் பாஜக தலைவர் அண்ணாமலையில் போட் பயணம் பெரும் நகைச்சுவையாகிவிட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சசிகலாவை அவரது ஆதரவு அதிமுகவினர் பலரும் அழைத்ததாக நாம் நேற்று பதிவு செய்திருந்தோம். வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டால் மக்களிடம் நெருக்கம் உருவாகும் என்றும், நீங்க இருக்கும் தி.நகர் பகுதியின் நிலைமை என்ன என்பதை அன்னுபவ ரீதியாக மக்களிடத்தில் சொன்னால் அனுதாபம் கூடுதலாகவே கிடைக்கும் என்றும் சொல்லியதாக நாம் எழுதி இருந்தோம்.

அரசியல் கணக்கு
இப்படி வெள்ள பாதிப்பு ஆய்வுக்கு சென்றால் இதுவரை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட விசிட் அனைத்தும் மறக்கப்பட்டுவிடும். உங்களது விசிட்தான் மக்களிடம் தாக்கத்தைத் தரும். அதிமுக தொண்டர்களும் உற்சாகமடைவார்கள் எனவும் கூறியிருக்கின்றனர். முதலில் இந்த விசயத்தில் ஆர்வம் காட்டாத சசிகலா, ஆதரவாளர்கள் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து தற்போது வெள்ள பாதிப்பு பார்வையிட வருகை தர உள்ளாராம்.

சசிகலா நாளை விசிட்
நாளை காலை முதல் தென்சென்னையில் தி.நகர் கிரியப்பா சாலையில் தொடங்கி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அசோக் நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் பார்வையிடுகிறாராம் சசிகலா. அப்போது பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார் சசிகலா என்கின்றனர் அவரது ஆதரவு வட்டாரங்கள். சசிகலாவின் இந்த விசிட் விவகாரம் அதிமுகவில் எடப்பாடி அணிக்கு கிலியை ஏற்படுத்தி இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications