திருவொற்றியூர் வடிவுடையம்மன், ஆதிபுரீஸ்வரர், வட்டப்பாறை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட சசிகலா
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலில் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவுடையம்மன், வட்டப்பாறை அம்மன், ஆதிபுரீஸ்வரர் சன்னதியில் சசிகலா சார்பில் சிறப்பு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்யப்பட்டது.
வடிவுடையம்மன் ஆலயம் புராதனப் பெருமை கொண்ட ஆலயமாகும். தேவாரம் பாடிய மூவரும் இந்தத் தலத்துக்கு வந்து பதிகம் பாடிய பெருமைகொண்ட பூமி இது.

தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருவொற்றியூர் தலமும் ஒன்று. இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார்.
பிரளய காலத்தில் இந்த உலகை அழியாமல் காக்கும் பொருட்டு சிவனாரிடம் எல்லோரும் வேண்டிக் கலங்கினர். அப்போது தன் நெற்றிக் கண்ணிலிருந்து வெப்பத்தை உண்டாக்கினார். அந்த வெப்பத்தைக் கொண்டு சூழ்ந்திருந்த தண்ணீரை ஒற்றி ஒற்றி எடுத்தார் என்றும் அதனால் இந்த ஊருக்கு திரு ஒற்றியூர் என்றும் பின்னர் அதுவே திருவொற்றியூர் என மருவியதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம்.
பட்டினத்தார் இங்கு வந்து வழிபட்டுள்ளார். வள்ளலார், தன் பால்யத்தில் இங்கேயே கோயிலைச் சுற்றியே வந்துகொண்டிருந்தாராம். ஆலயத்தின் மீது அப்படியொரு ஈர்ப்பு உண்டாம். வள்ளலாரின் பசியைப் போக்க, அவரின் அண்ணியின் வடிவில், வடிவுடையம்மனே வந்து உணவளித்ததாக ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.
இங்குள்ள ஆதிபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தம். சாந்நித்தியமான லிங்கம். பிரளயத்துக்குப் பின்னர் மண்ணில் இருந்து தோன்றிய லிங்க மூர்த்தம். புற்றுமண்ணாலான லிங்கம். எப்போதும் வெள்ளிக்கவசம் அணிந்து தரிசனம் தருகிறார் ஆதிபுரீஸ்வரர்.
கண்ணகிதான் இங்கு வட்டப்பாறை அம்மனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். வட்டப்பாறை அம்மன் முன்பு உக்கிரமாக இருந்துள்ளார் இதனால் இப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். இதையறிந்த ஆதிசங்கரர் இங்கு வந்து ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தார். இதனையடுத்து வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் சட்டெனத் தணிந்தது. அன்றைய தினம் முதல் தன்னை நாடி வருவோருக்கெல்லாம் கருணையும் கனிவுமாக, அன்பும் அருளும் வழங்கிக் கொண்டிருக்கிறாள் வட்டப்பாறை அம்மன்.
27 நட்சத்திரங்களும் இங்கு வந்து, தம் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தாம் பிறந்த நட்சத்திர நாளில் அந்தந்த நட்சத்திர லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷம். தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.
நாம் பிறந்த நட்சத்திர நாளில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு பால் மற்றும் ஐந்து முகருத்ராட்சம் ஒன்றை கொண்டு நட்சத்திர லிங்கங்கள் அமைந்திருக்கும் இடத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட காரிய சித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.
இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் இன்று சசிகலா சாமி தரிசனம் செய்தார். போயஸ்கார்டன் சென்று விட்டு காலை 8 மணியளவில் திருவொற்றியூர் சென்ற சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
வடிவுடையம்மன், வட்டப்பாறை அம்மன், ஆதிபுரீஸ்வரர் சன்னதியில் சசிகலா சார்பில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்றைய தினம் ரேவதி நட்சத்திர லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டார். அரைமணிநேரம் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் சசிகலா. சசிகலாவின் திடீர் வருகையால் சிறிது நேரம் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications