ஒரே நாளில்.. ஒரு குடும்பமே போச்சே! அருகருகே அப்பா - மகள் உடல்.. சத்யா சத்யா.. வெளியே நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் இளம்பெண் சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரின் அப்பா தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேரின் உடலும் தற்போது மருத்துவமனையில் ஒன்றாக அருகருகே வைக்கப்பட்டுள்ளன.
நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கை யாராலும் மறக்க முடியாது. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் 7 மணிக்கு சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கின் சுவடுகளே இன்னும் அழியாத நிலையில்தான் சென்னையில் ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சத்யா என்ற இளம் பெண்ணும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யா என்ற பெண் அவரை ஒருதலையாக காதலித்து வந்த சதீஷ் என்ற இளைஞரால் கொலை செய்யப்பட்டார்.
சத்யா தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், அவரை சதீஷ் ஒரு தலையாக காதலித்து உள்ளார். இவர்கள் இருவரும் போலீஸ் குடியிருப்பில்தான் வசித்து வந்துள்ளனர். சத்யாவின் அப்பா மாணிக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். சதீஷின் அப்பா தயாளன் முன்னாள் எஸ்.ஐ.
போலீஸ் குடியிருப்பில் சத்யாவை பார்த்த சதீஷ் பல வருடங்களாக அவரை காதலித்து வந்துள்ளார். சத்யா செல்லும் வழியில் எல்லாம் சதீஷ் சென்று, அவரை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். குடியிருப்பில் அடிக்கடி பார்த்து காதலை சொல்லி இருக்கிறார்.
கல்லூரிக்கு தனியாக செல்லும் போது, திரும்பி வரும் போதெல்லாம் காதலை சொல்லி இருக்கிறார். இந்த ஒருதலைக் காதல் காரணமாக மது உள்ளிட்ட போதை பொருள் பழக்கத்திற்கு சதீஷ் ஆளாகி இருக்கிறார். சதீஷ் பெரிதாக படிப்பு மீது ஆர்வம் காட்டாமல், ரவுடித்தனமாக சுற்றிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்த நிலையில்தான் சத்யா காதலை ஏற்றுக்கொள்ளாத கோபத்தில் நேற்று சதீஷ் அவரை கொலை செய்தார். பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயிலுக்காக சத்யா காத்திருந்த போது, சதீஷ் அவரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இதில் உடல் இரண்டாகி சத்யா சம்பவ இடத்திலேயே பலியானார்.
சதீஷ் அங்கிருந்து ஓடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு சதீஷ் சென்ற இடங்கள், அவரின் நண்பர் வீடுகள், அவரின் போன் சிக்னல் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. தொடர் தேடுதலுக்கு போன் நேற்று இரவு சதீஷ் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார்.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சத்யாவின் தந்தை மாணிக்கம் திடீரென இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இன்று காலை அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு காரணமாக பலியானதாக கூறப்பட்டது.
ஆனால் சற்று முன் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்படவில்லை. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இரண்டு பேரின் உடலும் ஒன்றாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பிணவறையில் இரண்டு பேரின் உடலும் அருகருகே வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு வெளியே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மருத்துவமனைக்கு வெளியே சத்யா உறவினர்கள் குவிந்து உள்ளனர்.
அங்கே சத்யாவின் உறவினர்கள் குவிந்து.. சத்யா.. சத்யா என்று கதறி அழுது கொண்டு இருக்கின்றனர்.

சத்யா மிகவும் சுட்டியான பெண். எல்லோரிடமும் அன்பாக பேச கூடியவர். ஜாலியாக இருக்கும் குணம் கொண்டவர். பெரிதாக எதை பற்றியும் கவலைப்பட மாட்டார். அவருக்கு போய் இப்படி ஆகிவிட்டதே என்று குடும்பத்தினர் கதறி அழுதபடி ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளனர்.
ஒரே நாளில் ஒரு குடும்பமே போச்சுங்க.. நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மாணிக்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றுதான் நினைத்தோம். ஆனால் விஷம் குடிச்சி இருக்கார். விஷ பாட்டில் கூட எங்க இருக்குனு தெரியல. ரொம்ப கஷ்டமா இருக்கு என்று மாணிக்கத்திற்கு நெருக்கமான அவரின் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
ஒரு ஒருதலைக் காதல்.. ஒரு கொலை.. அதை தொடர்ந்து ஒரு தற்கொலை என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் சத்யா குடும்பமே நொடிந்து போய் உள்ளது.












Click it and Unblock the Notifications