50 நாள் கால்ஷீட்.. ரஜினியின் தர்பார் ஆரம்பம்.. 234 தொகுதிகளில் நிற்பாராம் ரஜினி.. இப்படிக்கு அண்ணன்
234 தொகுதிகளிலும் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: அரசியல்ல குதிச்சவங்க கூட இவ்ளோ ஃபேமஸ் ஆக மாட்டாங்க.. அரசியலுக்கு வரப்போறேன்.. வரப்போறேன்னு சொல்லியே ஃபேமஸ் ஆனவர் ரஜினி மட்டும்தான்! கொஞ்சம் கேப் விட்டு இப்போ திரும்பவும் அரசியல் பேச்சு ஆரம்பமாகி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில், 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம் என்று ரசிகர்கள் முன்னிலையில் சொன்னார். பிறகு ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி, உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமானதும் எல்லோரும் நிஜமாகவே நம்ப ஆரம்பித்தார்கள்.
மாநில, மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட நியமிக்கப்பட்டனர். சிலரை நீக்கக் கூட செய்தனர். இடையில் 2, 3 படங்கள் ரிலீஸாகி ஓடியும் விட்டன. ஓட்ட வைத்தும் விட்டனர். அதன்பிறகு கப்சிப்! ரசிகர்களும் சோர்வாகி விட்டனர்!

அறிவுறுத்தல்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்று சொல்லவும், திரும்பவும் மக்கள் மன்ற ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதனால் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்குமாறு ரசிகர் மன்றத்தினரும் அறிவுறுத்தப்பட்டனர்.

நிலைப்பாடு அறிவிப்பார்
இப்போது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அதாவது அடுத்த மாசம் 23-ம் தேதி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாகவும் சொல்லி இருக்கிறார். ஏனெனில் அன்றைக்குதான் ஓட்டு எண்ணிக்கை. அப்போது நிலைப்பாடு குறித்து சொல்வதாக உள்ளார். (ஒருவேளை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கிறதோ, யாருக்கு சாதகமாக இருக்கிறதோ அதுக்கேற்ற மாதிரி இவர் நிலைப்பாடும் மாறும் போலும்)

தனித்து நிற்பார்
இந்த நிலையில், பிள்ளையார்பட்டியில் உள்ள கோவிலில் ரஜினிகாந்த் சகோதரர் சத்யநாராயணா சாமி தரிசனம் செய்ய வந்தார். வந்தவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சட்டமன்றத் தேர்தல்தான் ரஜினியின் இலக்கு. வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ரஜினி தனித்தே நிற்பார்.

நிச்சயம் வருவார்
இந்த தேர்தல் அவருக்கு ஒரு அனுபவமாக இருக்கிறது. யார் யார் நிற்கிறார்கள். என்ன பேசுகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகள் வரட்டும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அதனால் நிச்சயமாக வருவார்" என்று கூறியுள்ளார்.

ஏஆர் முருகதாஸ்
ஆனால் அரசியல் நோக்கர்கள் வேறு மாதிரி பேசுகிறார்கள். "தர்பார்" படம் ஆரம்பமாகிறது. அதற்காக 50 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளாராம் ரஜினி. இந்த படத்தை வெற்றிகரமாக ஓட்ட வேண்டும். இந்தப் படத்தை ரஜினி பெரிதும் நம்பியுள்ளார். காரணம், இதன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். இதே இயக்குநர் கொடுத்த ரமணாதான் விஜயகாந்த்தின் அரசியல் என்ட்ரிக்கு மிகப் பெரிய அஸ்திவாரத்தை தமிழக மக்கள் மத்தியில் போட்டுக் கொடுத்தது. அதேபோல ஒரு பிளாட்பார்மை ரஜினியும் இந்தப் படத்தின் மூலமாக எதிர்பார்த்துள்ளாராம்.

பின்னணி
எனவே தர்பாரின் வெற்றி ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் முக்கியமானது. இந்த பின்னணியில்தான் ரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினி வரப் போகிறார் என்பது போன்ற காட்சிகள் மீண்டும் வடிவமைக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications