சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! கருகிய நிலையில் ஒரு சடலம் மீட்பு! 9 பேர் படுகாயம்!
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4 முறை பட்டாசு வெடித்ததால் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. அது போல் விருதுநகர் மாவட்டம் சாத்தூரிலும் ஏராளமான பட்டாசு உற்பத்தி ஆலைகள் உள்ளன.

இங்கு அவ்வப்போது கொடூர விபத்துகள் நடந்து மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அது போல் உடல் உறுப்புகளும் பலருக்கு இல்லாமல் போன சம்பவங்களும் நடந்துள்ளன.
இங்கு அனுமதியின்றியும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினமும் சாத்தூரில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே கம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 4 முறை பட்டாசுகள் வெடித்து சிதறியதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த விபத்தில் அடையாளம் காண முடியாத வகையில் உடல் கருகிய நிலையில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
அவர் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 9 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications