ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ராஜவர்மன்.. அதிமுகவில் இருந்து நீக்கிய ஓபிஎஸ் இபிஎஸ்
சீட் கிடைக்காத விரக்தியில் அமமுகவில் இணைந்த சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆண்டவனாலும் கூட அதிமுகவை காப்பாற்ற முடியாது என்று சொல்லி விட்டு அமமுகவில் இணைந்த எம்எல்ஏ ராஜவர்மனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் அதிருப்தியில் இருந்தார். இன்று சென்னையில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவையும், டிடிவி தினகரனையும் உயர்த்தி பேசினார். எல்லாமே சசிகலாதான். அவர் இல்லாவிட்டால் கட்சியே இப்போது இருந்திருக்காது என்றும் சொன்ன அவர், சசிகலாவினால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என்று சொன்னார்.
அதிமுக படுதோல்வியடையும் என்று சொன்ன அவர், அதிமுகவில் உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சொன்னார். அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று சாபம் விடுவது போலவும் பேசினார்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/uZnWrx4g3p
— AIADMK (@AIADMKOfficial) March 11, 2021
இந்நிலையில், ராஜவர்மனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்எஸ்ஆர் ராஜவர்மன் எம்எல்ஏ (சாத்தூர் சட்டமன்ற தொகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications