சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று ஒரு முக்கிய மாற்றம்.. பயணிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு!
சென்னை: மொஹரம் பண்டிகையை ஒட்டி இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் நான்கு புனித மாதங்களில் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது மொஹரம். அந்த வகையில் இந்தாண்டும் உலகம் முழுவதும் இன்று மொஹரம் அனுசரிக்கப்படுகிறது. மொஹரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொஹரம் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை என்பதால், இன்று (ஜூலை 17) சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அதேபோல, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து, மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications