நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை.. உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அப்பீல்!
சென்னை: கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
சவுக்கு சங்கர் இணையத்தில் சவுக்கு ஆன்லைன் என்ற பக்கத்தை தொடங்கி இவர் அரசியல் ரீதியாக விமர்சனங்களை வைத்து வந்தார். அரசியல் ரீதியாக சில கடுமையான கருத்துக்களையும் பேசி வந்தார். சில யூ டியூப் சேனல்களிலும் பேசி வந்தார்.
கேட்டது கிடைக்கும்..உறுதியளித்த சிறை துறை! பட்டினி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த சவுக்கு சங்கர்
இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பற்றி, இவர் கடுமையான விமர்சனங்கள் சிலவற்றை வைத்தார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார்.
இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்க மறுத்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த வழக்கில் 6 மாதம் சிறை தண்டனை பெற்று இருக்கும் சவுக்கு சங்கர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.
முன்னதாக லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த காலத்தில் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகவும், போன் உரையாடல்களை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு 2008ல் இவருக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டது.
இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாததால், அவர் சஸ்பெண்ட் என்ற நிலையில் மட்டுமே இருந்தார். இதனால் அவருக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு அரசு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இந்த தண்டனை காரணமாக மொத்தமாக பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுக்கு சங்கர் கடந்த இரண்டு வாரம் முன் உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சவுக்கு சங்கர் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.