சவுக்கு சங்கருக்கு அடுத்த சிக்கல்.. தொலைபேசி ஓட்டு கேட்பு ரகசிய வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தொலைபேசி ஓட்டு கேட்பு ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விடுதலை செய்யபட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீடு வழக்கில் நான்கு வாரத்தில் பதில் அளிக்க சவுக்கு சங்கர்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனர் (டி.வி.ஏ.சி) அலுவலகத்தின் ரகசிய பிரிவில் சிறப்பு உதவியாளராக கடந்த 2008 ஆண்டு பணியாற்றிய சவுக்கு சங்கர் அங்கு இருந்த சில உரையாடல்களை திருடி வெளியிட்டதாக சென்னை சிபிசிஐடி காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் காவல்துறை தரப்பில் தெரிவித்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் சங்கரை விடுதலை செய்து கடந்த 2017 ஆண்டு பிப்ரவரி 24 தீர்ப்பளித்தது.
சென்னை அமர்வு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சிபிசிஐடி காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் விசாரணை நீதிமன்றம் அரசு தரப்பு சாட்சிகளை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. மேலும் உரையாடல்களை பதிவு செய்த பென் டிரைவ் சவுக்கு சங்கர் உடையது அதில் சில ரகசியங்களை திருடி வெளியிட்டது அவர்தான். விசாரணை நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளாமல் விடுதலை செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே விடுதலை ரத்து செய்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்க சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளி வைத்தார்.
நேற்று நடந்த வழக்கில் என்ன நடந்தது: சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால நிவாரணம் கோரிய சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதனை பார்ப்போம்.
சவுக்கு சங்கரின் குண்டர் சட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. நீதிபதி சுவாமிநாதன், வழக்கின் தகுதி அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். நீதிபதி பாலாஜி, அரசுத்தரப்பு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனால் வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற நீதிபதி பாலாஜி உத்தரவை ஏற்றுக் கொண்டார். அத்துடன் வழக்கை ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் E.ராஜ்திலக் ஆஜராகி, கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, இந்த வழக்கை வழக்கமான நடைமுறையின் படியே, வரிசையாக தான் விசாரிக்கப்படும் எனவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பின்னரே இந்த மனு இறுதி விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, இடைக்காலமாக விடுதலை செய்வதற்கு உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இந்த கோரிக்கை ஏற்க தக்கதல்ல என கூறினார். இதனையடுத்து, இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த மனுவை எட்டு வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications