சிபாரிசுக்கு நோ.... தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்...எச்சரிக்கும் முதல்வர்
தமிழ்நாட்டில் கூலிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் கூலிப்படைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், சிபாரிசுகளுக்கு இடம் தராமல் சட்டத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்; கடந்த 6-4-2022 அன்று நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை விவாதமானது தொடங்கப்பட்டது. வரிசையாகப் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டது. நேற்று, எனது கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று இருக்கிறது. இறுதியாக உள்துறை மீதான விவாதம் நடக்கிறது என்றால், அனைத்துத் துறைகளிலும் இது கடைசியானது என்று பொருள் அல்ல.
அனைத்துத் துறைகளுக்கும் இந்தத் துறையானது அடிப்படையானது என்பதால், இறுதியாக விவாதம் நடத்தப்படுகிறது என்று நினைக்கிறேன். உள்துறையானது சரியாகச் செயல்பட்டால் மற்ற துறைகளின் பணிகளும் சிறப்பாகச் செயல்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என உளப்பூர்வமாக நம்புகிறேன். சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கும் மாநிலத்தில்தான் வளர்ச்சி என்பது இருக்கும்.
மயிலாப்பூர் இரட்டை கொலை..6 மணி நேரத்தில் குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி! முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
அமைதியான மாநிலம்
கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு துறைகளும் எத்தகைய வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்பதை கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சட்டமன்ற நடவடிக்கைகளின் மூலமாக நீங்கள் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு அடித்தளமான அமைதியை உருவாக்கியது உள்துறைதான் என்பதை அனைவர்க்கும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். முன்பு ஒருமுறை சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டுச் சொன்னதையே இங்கு மீண்டும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
குற்றங்கள் அற்ற மாநிலம்
காவல் துறை என்பது குற்றங்களே நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கித் தரக்கூடிய துறையாக மாறவேண்டும் என்பது என்னுடைய ஆசை; இந்த அரசினுடைய கொள்கை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிடக் குற்றமே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும். கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள் வன்முறைச் சம்பவங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத நிலையை உருவாக்குவதற்கு காவல் துறை திட்டமிட வேண்டும்.
குற்றம் சொல்லக்கூடாது
எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்கள் உருவாக்க நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில், காவல் துறையும் யாராலும் கை நீட்டிக் குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு இந்த ஆட்சியின் தவறாக குற்றம் சாட்டப்படும்.
யாராக இருந்தாலும் நடவடிக்கை
அவர்மீது நாம் நடவடிக்கை எடுத்தாலும், ஆட்சியின் மீதான கறையாக அந்தச் சம்பவம் பேசப்படும். எனவே, காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும். எந்த திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், அதிகாரிகளும் தவறு செய்துவிடக் கூடாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.