எஸ்பிஐ KYC பெயரில் மெசேஜ்: பாரத ஸ்டேட் வங்கி அக்கவுண்ட்டில் ரூ.7000 காலி! மொத்த குரூப்பும் சிக்கியது
சென்னை: வங்கி கணக்கின் கே.ஒய்.சி விவரங்களைப் புதுப்பிக்கக் கோரி வரும் தேவையற்ற மெசேஜ்களை ஓபன் செய்வதன் மூலம், பொதுமக்களின் சேமிப்பு பணம் திருடப்படும் அபாயம் தற்போது அதிகரித்துள்ளது.. வங்கி பெயரில் பரப்பப்படும் போலி வெப்சைட் லிங்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மூணாறில் நடந்த ஆன்லைன் மோசடி சம்பவத்தை முன்னிறுத்தி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. அது என்ன?
தற்கால டிஜிட்டல் உலகில் வங்கிச் சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ள அதே வேளையில், வங்கிகளின் பெயரையும் ஏடிஎம் மையங்களையும் கேடயமாகப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்களின் அட்டகாசம் சர்வதேச அளவில் அதிகரித்து வருகின்றது..

இந்தியன் வங்கி, எஸ்பிஐ
இந்தியன் வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் கூட இத்தகைய அத்துமீறல்கள் மிக சாதாரணமாக நடைபெற்று வருவதாகப் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் சேமிப்பைக் குறிவைக்கும் இந்த மர்ம கும்பல்கள், தற்போது சமூக வலைதளக் குழுக்களையும் தங்கள் வலைக்குள் சிக்க வைக்கத் தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
இதோ நேற்றுகூட, கேரள மாநிலம் மூணாறு பகுதியில் நடைபெற்ற ஒரு நூதன ஆன்லைன் பண மோசடிச் சம்பவம் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் தாலுகா அளவில் செயல்பட்டு வரும் ரேஷன் விற்பனையாளர்கள் சங்கத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வாட்ஸ் ஆப் குழுவே இந்த மோசடிக்கு முக்கிய காரணமாகும்.. எப்படி தெரியுமா?
பாரத ஸ்டேட் வங்கி அக்கவுண்ட்
அந்த வாட்ஸ் ஆப் குழுவில் "பாரத ஸ்டேட் வங்கி" பெயரில் ஒரு போலியான மெசேஜ் ஷேர் செய்யப்பட்டுள்ளது.. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கின் கே.ஒய்.சி விவரங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.. அதனுடன் ஒரு மர்மமான வெப்சைட் லிங்கும் இணைக்கப்பட்டிருந்தது..
பிரபல வங்கிபெயர், கேஒய்சி விவரங்கள் கேட்டிருக்கவும், பலரும் இந்த மெசேஜை பார்த்ததுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று தவறுதலாக புரிந்துகொண்டனர்.. அப்படித்தான், மூணாறு சிவன்மலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த விற்பனையாளர் கபீர் என்பவர், தனது கே.ஒய்.சி விவரங்களை சரிசெய்ய அந்த லிங்கை திறந்துள்ளார்..
சிறு சிறு தவணைகள்
அவர் அந்த லிங்கைத் தொட்டதுமே, அவரது செல்போனில் இருந்த தொடர்பு எண்களின் வழியாக அந்தத் தகவல் வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தானாகவே பரவத் தொடங்கியது.. இதனால் குழுவில் இருந்த மற்றவர்களும் இது உண்மையான செய்திதான் என்று நம்பும் நிலை உருவானது..
இதனால், தேவிகுளத்தை சேர்ந்த மற்றொரு விற்பனையாளரான ராஜா அந்த லிங்கைத் திறந்த சில நிமிடங்களிலேயே, அவரது வங்கி கணக்கில் இருந்து சிறு சிறு தவணைகளாக 7 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது.. அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதைக் காட்டும் மெசேஜ்கள் வந்த பிறகே, தாம் ஏமாற்றப்பட்டதை அவர் அதிர்ச்சியுடன் உணர்ந்தார்..
சைபர் கிரைம் போலீஸ் அலர்ட்
இதனால் பதற்றமடைந்த சங்க உறுப்பினர்கள் உடனடியாக மூணாறு காவல் நிலையத்திலும், மாவட்ட சைபர் கிரைம் பிரிவிலும் முறையான புகார் அளித்தனர்.. போலீசார் அந்த குறிப்பிட்ட லிங்கை யாரும் திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்ததோடு, மோசடி கும்பலைத் தேடி வருகின்றனர்..
இந்தச் சம்பவம் வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.. வங்கியில் வைத்துள்ள தங்களது சேமிப்புப் பணத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்று கருதிய பல விற்பனையாளர்கள், தங்கள் கணக்கில் எஞ்சியிருந்த பணத்தை உடனடியாகத் திரும்பப் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.. இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க, வங்கி பெயரில் வரும் தேவையற்ற லிங்குகளைத் தொடக்கூடாது என்றும், எந்த வங்கியும் ரகசியத் தகவல்களை லிங்க் மூலம் கேட்பதில்லை என்பதையும் மக்கள் உணர வேண்டும்..












Click it and Unblock the Notifications