சீமானுக்கு சிக்கல்? வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுங்க.. காவல்துறைக்கு எஸ்சி/எஸ்டி ஆணையம் உத்தரவு
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையகரத்திற்கு மாநில எஸ்.சி., எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவரது கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு இருந்தார். இவரது கைது தொடர்பாக பேசிய சீமான், சாட்டை துரைமுருகன் கைதுக்கு காரணமான குறிப்பிட்ட அந்த சொல்லை, சீமான் பிரஸ் மீட்டில் பேசினார்.

மேலும், அது ஏற்கனவே இருந்த பாடல் என்றும் அந்த பாடலை தான் எழுதவில்லை எனவும் சீமான் விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையே, சீமானுக்கு எதிராக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த 16.07. 2024 அன்று, காவல் நிலையத்தில் புகாரளித்து இருந்தார். அவர் தனது புகார் மனுவில், சீமான் செய்தியாளர் சந்திப்பில், மறைந்த தலைவர் கருணாநிதி குறித்துப் பாடிய பாடல் தீண்டாமையை வலியுறுத்தும் தடை செய்யப்பட்ட வார்த்தைகளைக் கொண்டிருந்ததால், எனது தலைவரான கருணாநிதியை இழிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சீமான், இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்ட அந்த வார்த்தை இழிவுபடுத்தும் சொல் என்றும் தனது படத்தில் பயன்படுத்தியது தவறு எனவும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே நன்கு தெரிந்தே கருணாநிதியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும் பேசியும் இருக்கிறார் சீமான். இது எனது மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே சீமான் மீது குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரளித்துள்ளார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்டு CSR அளித்துள்ள காவல்துறை 22.07.2024 வரை சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், இது தொடர்பாக மாநில பட்டியலின ஆணையத்திற்கு அஜேஸ் புகார் அனுப்பினார். இந்த புகாரை பரிசீலித்த பட்டியலின ஆணையம், பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மனுதாரர் அளித்த புகாருக்கு பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பது பற்றி நிலை அறிக்கை ஒன்றினை 12.08.2024க்குள் ஆணையத்திற்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் தான் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று ஆவடி காவல் ஆனையகரத்திற்கு எஸ்.சி/எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க எஸ்.சி/எஸ்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது, நாம் தமிழர் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications