சூதானமா இருங்க.. ஸ்டேட் வங்கி போலி வெப்சைட்! மின்வாரிய அதிகாரிபோல் போன்கால்! புதுசு புதுசா மோசடி
சென்னை: ஸ்டேட் வங்கி இணையதளம் போல் போலியாக இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்வது, மின்வாரியத்தில் இருந்து தொடர்புகொள்வதைபோல் அழைத்து ஈபி பில் கட்ட மோசடி செய்வது என பல வகைகளில் ஆன்லைன், செல்போன் மூலமாக மோசடிகள் நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேரூராட்சி துறையில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர் முஹம்மது அப்பாஸ் என்பவர் பதிவிட்டு உள்ளதாவது, "சமீப காலமா ஆன்லைன் மூலமாக ஆட்டய போடும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. கொஞ்சம் தெளிவான ஆட்கள் கூட அவ்வப்போது இதில் சிக்கி கொள்வது உண்டு. எனது நண்பனின் தம்பிக்கு சில மாதங்களுக்கு முன்பு "தங்களது SBI வங்கியின் இணையத்தள கடவுச்சொல்லை (password) புதுப்பித்து கொண்டு சேவையை தொடரவும்" என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் இருந்த இணைப்பை தொட்டு உள் சென்றால் அச்சு அசலாக SBI இணைய தளத்தை போலவே இருந்துள்ளது. அதனால் தனது ID Password உள்ளீடு செய்த அடுத்த நொடி 25,000 ரூபாய் திருடப்பட்டு விட்டது. சில நாட்களுக்கு முன்பு எனது நண்பன் ரபீக் அஹமதுக்கு கீழ்க்கண்ட குறுஞ்செய்தி வந்தது.
அதில் "இன்று இரவு தங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும், காரணம் தங்களது முந்தைய மாத மின் கட்டணங்கள் வரவாகவில்லை. மின் வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளவும் என ஒரு எண் கொடுக்கப்பட்டு உள்ளது." பொதுவாக இந்த மின் கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்தியது வரவு ஆகவில்லை என்ற பிரச்சினை, தாமதமாக வரவு ஆவது போன்ற விசயங்கள் உள்ளன.

இதை பயன்படுத்தி ஒரு குறுஞ்செய்தி வந்தால் யாராகினும் தடுமாற வாய்ப்பு உள்ளது. நண்பன் சற்று சுதாரித்து கொண்டு அந்த எண்ணை ட்ரூ காலரில் செக் செய்த போது ராகுல் மல்ஹோத்ரா என்று வந்துள்ளது. மண்டைய மறைத்து கொண்டையை மறைக்காமல் மாட்டிக்கொண்டார் நம் வடக்கு நண்பர். இருந்தும் அவன் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசி பார்த்தால் வழக்கம் போல நிம்மில் கு எந்த ஊரு போன்ற தமிழ்.

பிறகு அவர் ஒரு செயலியை தரவிறக்கம் செய்து, உங்களது மொபைல் ஸ்கிரீன் ஐ நானும் பார்க்கும் படி செய்யுங்கள், நீங்கள் பணம் செலுத்தியது உண்மை தானா என சரி பார்த்து கொள்கிறேன். அப்போது தான் உடனடியாக மின் இணைப்பு நடவடிக்கையை தவிர்க்க இயலும் என்றுள்ளார். நம்ம பய கொஞ்ச நேரம் அவனோட பேசி பொழுது போக்கிட்டு தப்பிச்சிட்டான்.

காவல் துறையும் இந்த சைபர் குற்றங்கள் குறித்து பிரசாரங்கள் செய்து வந்தாலும், வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் வருகின்றனர். சூதானமா இருங்க. எதுவாயிருந்தாலும் எந்த லிங்கையும் பின் தொடர்ந்து செல்லாமல் இருந்தாலே தப்பித்து கொள்ளலாம்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications