பட்டையை கிளப்பும் வெயில்.. இடி மின்னலுடன் இதமாய் பெய்யும் சாரல் மழை - வானிலையில் ஜில் அறிவிப்பு
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்ற முதல் வரும் 30ஆம் தேதி வரைக்கும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் பகல் நேரங்களில் பல ஊர்களில் வெயில் பட்டையை கிளப்பினாலும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. சில ஊர்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. சின்கோனா, பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதிகளில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் சோலையாறு, வால்பாறை பகுதிகளில் தலா 2 செமீ மழையும் சோழவரம், தேவாலா, வால்பாறை தாலுகா அலுவலகம், அவலாஞ்சி, தாமரைப்பாக்கம், கெட்டி, மேல் பவானி, குந்தா பாலம், ரெட் ஹில்ஸ், பொன்னேரி, செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 26.06.2022, 27.06.2022 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28 முதல் 30ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்று முதல் 28.06.2022 வரை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.