ரூ688.48 கோடியில்.. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS சிறப்பு திட்டம்- ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும் என்றும், ரூ.688.48 கோடி மதிப்பிலான இந்த திட்டம் உலக வங்கி ஆய்வில் இருப்பதாகவும், 2021-22ம் நிதியாண்டு இடைக்கால பட்ஜெட் உரையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு 8 சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

2021-22 நிதியாண்டில் 4 ஆயிரத்து 316 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உதவி பெறும் வகையில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2058 கோடி செலவிடப்பட்டு உழவர்கள் பலன் அடைந்துள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா காப்பீட்டு திட்டத்தை இந்திய காப்பீடு நிறுவனத்தோடு இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதனால் பலன் கிடைக்கிறது. குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும். மேலும் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications