தள்ளி போகிறதா பள்ளிகள் திறப்பு.. அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை
சென்னை: கோடை காலம் நிறைவடைய போகிறது. தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளி திறப்புக்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களை தொடர்ந்து மே மாதத்திலும் வெயில் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. வெயில் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வெயில் கொளுத்துகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.

வாட்டி வதைக்கும் வெயில்
அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. வருகிற மே 28 ஆம் தேதி தான் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதன்பிறகும் வெயில் குறைந்து இயல்பு நிலை திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதுமே அடுத்த 10 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களும் பள்ளி திறப்புக்கு தயாராகி வருகிறார்கள். சீருடை, புத்தகங்கள் விநியோகம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தள்ளி போகிறதா பள்ளிகள் திறப்பு
ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைக்க வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள், மஜக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, பெற்றோர் ஆகியோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
அதேபோல இந்த வருடமும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் பள்ளிகள் திறப்பில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.












Click it and Unblock the Notifications