சென்னையில் நாளை பள்ளிகள் உண்டு.. எந்த நாளின் பாடவேளை பின்பற்றப்படும்.. வெளியான அறிவிப்பு
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிசம்பர் 6) வழக்கம்போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். மேலும் எந்த நாள் பாடவேளையில் பள்ளிகள் செயல்படும் என்பது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கையையொட்டிய வங்கக்கடலில் ‛டிட்வா' புயல் உருவானது. இந்த புயல் இலங்கையை பந்தாடியது. சூறைக்காற்று, கனமழையால் இலங்கை வெள்ளத்தில் மூழ்கியது. சுமார் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த புயல் இலங்கையில் இருந்து தமிழக கடற்கரையை ஒட்டி பயணித்து வட தமிழகம், புதுச்சேரி பகுதியை அடைந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக சென்னையில் மீண்டும் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தை எடுத்து கொண்டால் டிசம்பர் 2, 3, 4 என 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது விடுமுறையை சமன் செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 2 ம் தேதிக்கான விடுமுறைக்கு பதிலாக நாளை (சனிக்கிழமை, டிசம்பர் 6) சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் நாளை (டிசம்பர் 6) வழக்கம்போல் செயல்படும். ‛டிட்வா' புயலால் பெய்த கனமழையின் காரணமாக டிசம்பர் 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுப்பை ஈடு செய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை புதன்கிழமை பாடவேளையை பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications