2038 குறுங்கோள்கள் தாக்குதல் ஒரு பக்கம் இருக்கட்டும்! இதற்கு முன்னர் நடந்த தாக்குதல்களை பாருங்க
சென்னை: எதிர்வரும் 2038ம் ஆண்டில் விண்கல் ஒன்று பூமியின் மீது மோதப்போகிறது என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். ஆனால், இப்படி நடப்பது பூமிக்கு புதியதல்ல. மனிதர்களுக்கு வேண்டுமானால் இது கடைசியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சர்வதேச நாடுகளை சேர்ந்த விண்வெளி துறை விஞ்ஞானிகள் விண்வெளியை கவனமாக உற்று நோக்கி வருகின்றனர். அந்த வகையில் குறுங்கோள் ஒன்று 2038ம் ஆண்டு பூமியை தாக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு 72% ஆக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சரியாக சொல்வதெனில் 2038ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி இந்த விண்கல் பூமியை தாக்கும்.

அப்படி தாக்கினால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று தற்போது வரை கணிக்க முடியவில்லை. ஒருவேளை உலகில் உள்ள உயிர்கள் மொத்தமும் கூட கூண்டோடு அழிய வாய்ப்பிருக்கிறது. இப்படியாக ஏற்கெனவே பல முறை நடந்திருக்கிறது. குறுங்கோள் தாக்குதல் நடக்கும்போது ஒவ்வொரு முறையும் பூமி தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குறுங்கோள் ஒன்று தாக்கியதற்கான அடையாளம் இன்றும் அப்படியே இருக்கிறது. சுமார் 160 அடி அகலமும் 3,30,000 டன் எடையும் கொண்ட, இரும்பு துகள்களால் ஆன பெரிய குறுங்கோள் தாக்கியதன் விளைவாக இன்று காணப்படும் பள்ளம் உருவாகியுள்ளது. இது பூமியை 43 ஆயிரம் கி.மீ வேகத்தில் தாக்கியது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுக்குண்டை போல 150 குண்டுகள் வீசப்பட்டால் எந்த அளவுக்கு வெப்பம் வெளியாகுமோ அதே அளவு பாதிப்பை இந்த குறுங்கோள் ஏற்படுத்தியது.
அதேபோல தியா எனும் குறுங்கோள் மோதியதால்தான் தற்போது நமக்கு நிலவு கிடைத்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தவிர யுகடான் தீபகற்பத்தின் கடற்கரைக்கு அருகில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு குறுங்கோள் மோதியது. இது பூமியில் 20 கி.மீ வரை ஆழத்தை ஏற்படுத்தியது.
இது தவிர சுமார் 1.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்டாரியோவின் சட்பரியில் மிகப்பெரிய குறுங்கோள் ஒன்று தாக்கியிருக்கிறது. இந்த குறுங்கோள் 72 ஆயிரம் கி.மீ வேகத்தில் பூமியை தாக்கியதால், 16 கி.மீ ஆழத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது. இப்படியாக ஒவ்வொரு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற குறுங்கோள் தாக்குதல் பூமி மீது நடக்கிறது.
இப்படியான தாக்குதல் ஒன்றின்போதுதான் டைனோசர்கள் உட்பட 70-80 சதவிகிதமான உயிர்கள் பூமியிலிருந்து அழிந்துவிட்டன. மீதி தப்பி பிழைத்த 30-20 சதவிகித உயிர்களில் மனிதர்களும் ஒன்று. குறுங்கோள் தாக்குதலில் உயிர்கள் அழிவது குறித்த கற்பனையான பல கதைகள் இருக்கின்றன. அதாவது குறுங்கோள் மோதியவுடன் ஏற்படும் தாக்கத்தில் உயிர் உடனடியாக அழிந்து விடுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அது உண்மையில்லை. குறுங்கோள் மோதியவுடன் பூமிக்கடியில் உள்ள லாவா-க்கள் எரிமலை வழியாக வெளியேறுகின்றன. அதேபோல, சுனாமிகள், நில அதிர்வுகள் போன்றவை ஏற்பட்டு உயிர்கள் அழிந்தன. எரிமலை குழம்பு உலகம் முழுவதும் சூழந்த நிலையில் அதிலிருந்து வெளியேறும் புகை பூமியின் வளிமண்டலத்தை சூழ்ந்து காற்று மாசு ஏற்படுத்தி உயிர்களை மெல்ல மெல்ல கொன்றிருக்கின்றன. இப்படித்தான் டைனோசர்கள் உயிரிழந்திருக்கின்றன.
அதேபோல குறுங்கோள் தாக்குதல் சில நன்மைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. பூமிக்கடியில் உள்ள உலோகங்களை இந்த குறுங்கோள்கள் மேலே கொண்டுவந்திருக்கின்றன. இதன் மூலம் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பூமி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தன்னை 'ரிஃபிரஷ்' செய்து கொள்கிறது என தெரிய வருகிறது. இதற்கிடையில் மனிதர்களாகிய நாம் போர், ஆதிக்கம் போன்றவற்றை செய்து வருகிறோம்.












Click it and Unblock the Notifications