ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் அவசியம்.. ஹைகோர்ட் உத்தரவை ரத்து செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை
சென்னை: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் அவசியம் என்ற உயர்நீதிமன்றம் உத்தரவு சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு சுற்றுலாவை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, கோடை வெயிலிலிருந்து இளைப்பாற இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் மக்களுக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். மட்டுமின்றி, உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கும் நேரத்தில், வெளியூர் பதிவெண் கொண்ட வாகனத்தை வைத்துக் கொண்டு, இப்பகுதியில் சுற்றுலா தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும், வெளியூர் வாகனத்தை வைத்துள்ள உள்ளூர் மக்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஊட்டி, கொடைக்கானல் பகுதி மக்களின் வாழ்வாதாரமே கோடை சீசன் காலம் தான் என்பதால், இந்த சீசன் காலத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும். ஆகவே, தமிழக அரசு இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவின் மீது மேல்முறையீடு செய்து, கொடைக்கானல், ஊட்டி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இ-பாஸ் உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications