தமிழக பட்ஜெட் சிறுபான்மையினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை! ஏமாற்றமே மிச்சம்! -எஸ்.டி.பி.ஐ.
இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்காத பட்ஜெட் என எஸ்.டி.பி.ஐ. விமர்சனம்.
சென்னை: தமிழக பட்ஜெட் சிறுபான்மையினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என எஸ்.டி.பி.ஐ. கட்சி ஏமாற்றம் தெரிவித்துள்ளது.
சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை, நிதி ஒதுக்கீட்டுடன் திருத்தப்பட்ட பட்ஜெட் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியிருப்பதாவது;

குடும்பத் தலைவிகளை ஏமாற்றும் செயல்
''குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பாக செப்.15 முதல் அந்த உதவித் தொகை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில், அறிவிப்பின்படி அந்த திட்டம் தொடங்க இன்னும் 6 மாத காலங்கள் வரை ஆகும். திட்டத்தை செயல்படுத்த அறிவிக்கப்பட்ட அந்த காலம் கூட எதிர்வரும் பொதுத் தேர்தல் நேரத்துக்கான அறிவிப்பாகவே தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த திட்டத்தின் பயனாளிகளாக தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் தான் என்கிற நிபந்தனையானது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் இந்த உரிமத் தொகை கிடைக்கப்பெறாது என்பது தெளிவாகிறது. இது குடும்பத் தலைவிகளை ஏமாற்றும் செயலாகவே தெரிகிறது.''

சிறுபான்மையினர் நலன்
''பட்ஜெட் அறிவிப்பில் ஆதிதிராவிட பட்டியலின சமூக மக்களுக்காக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் போதுமான திட்ட அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. சமூக நீதிக்கான அரசு என சொல்லிக்கொள்ளும் இந்த அரசின் பட்ஜெட்டில் சிறுபான்மை நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-க்கான திருத்திய பட்ஜெட்டிலும், கடந்த 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும், இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான எவ்வித திட்டங்களும் இடம்பெறாது சமூகநீதி அரசுக்கான இலக்கை கேள்விக்குட்படுத்துகிறது.''

பள்ளிவாசல்கள்
''பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான அறிவிப்பில், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுது பார்க்கவும் புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தாண்டி வேறு எந்த விதமான சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான அறிவிப்புகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. தர்காக்கள், பள்ளிவாசல்கள், தேவாலங்களை புனரமைப்பது மட்டுமே ஒரு அரசின் சிறுபான்மை சமூக நலன் திட்டமாக அறிவிப்பது ஏற்புடையதல்ல. அதையும் தாண்டி ஏராளமான செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் உள்ளன என்பதை அரசு கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.''

''ஏமாற்று பட்ஜெட்''
''கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டபோது, சிறுபான்மை சமூக மக்களுக்காக தனி பட்ஜெட்டை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்தது. கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் சூழல், தொழில் ஆகியவற்றை மேம்படச் செய்யும் அறிவிப்பாக அது இருக்க வேண்டும் என வலியுறுத்தியது. சமூக நீதி அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்த அரசு சிறுபான்மை சமூக மக்களின் முன்னேற்றத்துக்காக எந்த திட்டத்தையும், அறிவிப்பையும், நிதி ஒதுக்கீடையும் செய்யாதது சிறுபான்மை சமூக மக்களிடையே இந்த அரசு குறித்த வெறுமையையே ஏற்படுத்தியுள்ளது. மொத்தத்தில் சிறுபான்மை சமூக மக்களின் எதிர்ப்பார்ப்பை, நம்பிக்கையை பூர்த்தி செய்யாத ஏமாற்று பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.''












Click it and Unblock the Notifications