காத்து மாறுதே.. எடப்பாடியை சந்தித்த எஸ்டிபிஐ தலைவர்! சூடுபிடிக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரம்
சென்னை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் நேற்று மாலை சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய முடிவுக்கு எஸ்டிபிஐ நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு சிறைகளில் உள்ள நீண்டநாள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து, அந்த கோரிக்கைக்கு வலுசேர்த்ததற்காக அதிமுகவுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முஸ்லிம்களின் நீண்டநாள் கோரிக்கையான, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை நிறைவேறும் வகையில், அதிமுக தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி ஆதரவு தர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், எஸ்.டி.பி.ஐ. மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் முகமது ரஷீத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்." என்று குறிப்பிட்டு உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறி இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று உள்ளது.
முன்னதாக எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், நீண்டநாள் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவர வேண்டும். மேலும், இக்கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் அழுத்தம் தரும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, மதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த கோரிக்கையின் அடிப்படையில், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளின் உடல்நிலை, வயது மூப்பு, குடும்ப சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்த அதிமுகவுக்கும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, 36 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கு தொடர்ந்து வலுவாக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் விவாதத்தில் கலந்துகொண்டு முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.செல்வப் பெருந்தகை, விசிக சட்டமன்ற உறுப்பினர் திரு.சிந்தனைச் செல்வன், பாமக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, மதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பூமிநாதன் உள்பட முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி பேசிய அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
-
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications