ஏஆர் ரஹ்மான் கச்சேரி குழப்பம்.. அதில் "ஒரு சதி" இருக்கலாம்! எஸ்டிபிஐ சொல்லும் புதிய கோணம்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் மீதான தொடர் விமர்சனங்களை பார்த்தால் சதியையே வலதுசாரிகள் செய்து இருப்பார்களோ என சந்தேகம் எழுவதாக எஸ்டிபிஐ கட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் நெர்ல்லி பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "சென்னை ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சரிவர திட்டமிடாத செயல்கள் காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள், நெரிசல்கள் பெரும் விவாதமாகி கொண்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் இத்தகைய திட்டமிடாத செயல் ஏற்புடையதல்ல. இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல்களால் நிகழ்ந்த குளறுபடிகள் மற்றும் மக்களின் வேதனைகளுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொண்டது ஏ.ஆர்.ரஹ்மானின் பெருந்தன்மையை காட்டுகிறது. மேற்கண்ட இசை நிகழ்ச்சியின் அனைத்து குளறுபடிகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல்களே காரணம் என தெரியவந்த பின்னரும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை மதரீதியில் விமர்சித்து வெறுப்பினை கக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
கலைத் துறையில் சர்வதேச அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் இசைக் கலைஞன் மீது மத ரீதியாக வெறுப்பினை கக்கும் விசமத்தனத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மீதான வெறுப்புக்கு காரணம், சமீப காலமாக அவர் நாட்டில் பரவிவரும் வெறுப்புக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழுக்கு ஆதரவாகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே காரணம்.
சர்வதேச அளவில் தேசத்திற்கு பெருமை சேர்க்கும் போது பொதுவான கலைஞனாக தெரிந்தவர்களுக்கு, தங்களின் வெறுப்பு நடவடிக்கைகளை எதிர்த்த பின்னர் அவர் ஆஸ்கர் நாயகனாக இருந்தாலும் ஒரு முஸ்லிமாக அடையாளம் காட்டப்பட்டு, அவதூறுகள் மூலம் அவர் மீது வெறுப்பை கக்கி வருகின்றனர். இத்தகைய வெறுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகம் ஒருபோதும் ஆட்பட்டு விடக்கூடாது. பாசிசம் எந்த வழியில் வந்தாலும் அதனை தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "சங்கிகள் பார்வையில்...!? உலக அரங்கில் சாதனையின் உச்சம் தொட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்,ரஹ்மான். மதம் கடந்து, மொழி கடந்து சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் ஒருவரை எதைக்கொண்டு வதைக்கலாம் என ஏங்கிய மதவெறி கும்பல் அவரால் நிகழாத போதும் பெருந்தன்மையாக அவரே பொறுப்பேற்ற பின்னும், மனம் வருந்தி கவலையில் உள்ள நிலையில் மனிதாபிமானத்துடன் சில நகர்வுகளை முன்னெடுத்த நிலையிலும் வன்மத்துடன் வம்பிழுக்கும் சங்கிகளின் சண்டாளத்தனத்தை வன்மையாக கண்டிப்போம்.
அவர் உச்சம் தொட்ட முஸ்லிம் என்பதாலேயே கயமை கருத்துக்களை அள்ளி வீசுவதை பார்த்தால், சதி சங்கிகள் மூலம் நிகழ்ந்திருக்குமோ என அஞ்சத் தோன்றுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications