பாஜகவுக்கு “டுவிஸ்டு” வைத்த அதிமுக.. வரவேற்ற எஸ்டிபிஐ! பொதுசிவில் சட்ட விவகாரத்தில் அதிரடி முடிவு
சென்னை: பொதுசிவில் சட்டம் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்பதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் 22வது சட்ட ஆணையம் கடந்த ஜூன் 14ல் பொதுசிவில் சட்டம் குறித்து மத அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொதுசிவில் சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யவும் ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், பொதுசிவில் சட்டம் கொண்டுவருவதற்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது.
இந்த நிலைப்பாட்டுடன் நாடாளுமன்றத்திலும் பாஜக அரசு கொண்டுவரும் தீர்மானத்துக்கு எதிராக உறுதியாக நின்று எதிர்த்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பாஜக அரசின் மதவாத அரசியலை, நாட்டின் பன்முகத்தன்மை மீதான அதன் தாக்குதலைக் கண்டித்து கூட்டணியிலிருந்து வெளியேறி மக்களுக்கான அரசியலில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்கள் பொதுசிவில் சட்டத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, நாட்டின் பன்முகத் தன்மையைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவரும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக, மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா என்பது பல்வேறு கலாச்சார, இன, மத மற்றும் மொழியியல் குழுக்கள் தங்கள் சொந்த பழக்கவழக்கங்கள், சடங்குகள் மற்றும் சட்டங்களைப் பின்பற்றி வாழும் பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்றவையே சிவில் சட்டத்தில் வருகிறது.
இதற்காக ஒவ்வொரு சமூகமும் தனித் தன்மையுடன் கூடிய பழக்க வழக்கங்கள் மற்றும் தனிச் சட்டங்களைப் பின்பற்றி வருகின்றன. ஒவ்வொரு இனத்துக்குள்ளும், சாதிக்குள்ளும் இருக்கும் உட்பிரிவுகளில் கூட பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் மாறுபடுகின்றன. இந்த சூழலில் பல்வேறு மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகளைக் கொண்ட மக்கள் வாழும் தேசத்தில், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று குரல் எழுப்புவதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் இந்துத்துவ அஜெண்டா உள்ளது.
ஆகவே, பாஜக அரசின் பொதுசிவில் சட்ட நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டும். இத்தகைய வகுப்புவாத நடவடிக்கைக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், ஒன்றிய அரசின் மசோதாவை ஒன்றிணைந்து அதனைத் தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications