“தவெக உடன் கூட்டணியா?" எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக் பரபர பேட்டி!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். திமுக அல்லது கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இணையக்கூடும் எனக் கூறப்படும் நிலையில் அக்கட்சியின் முடிவு அரசியல் களத்தில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்று இருந்தது. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதால் அந்த கூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ கட்சி வெளியேறி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இதுவரை கூட்டணி குறித்த முடிவை அக்கட்சி எடுக்கவில்லை. எஸ்டிபிஐ கட்சி திமுக கூட்டணியில் இணையுமா? தவெக கூட்டணியில் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஐடி விங்க் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எஸ்டிபிஐ கட்சி 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தன்னுடைய கணக்கை தொடங்கும். அதற்கு ஏற்றார்போல் கூட்டணி அமைக்கும்.
இந்த மாத இறுதி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மாநில குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்போம். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியா? அல்லது யாருடன் கூட்டணி? என்பதை எங்களுடைய மாநில குழுவில் முடிவு செய்யப்படும். மக்களுக்காக உழைப்பதற்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க நாங்கள் தயார்.
பாஜகவை தவிர மற்ற அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம். மாஸ் லீடராக வரும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், மக்களுக்கு பணி செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கப் போவது மக்கள் தான். அவர்கள் தான் எஜமானர்கள். அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, "வருமான வரித்துறை, அமலாக்கத் துறையை தொடர்ந்து அந்த பட்டியலில் தற்போது புதிதாக சென்சார் போர்டை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகன் திரைப்படம் வெளி வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கலைக்கு அரசியல் கிடையாது. எனவே இதில் அரசியல் செய்ய வேண்டாம்" என்றார்.
காங்கிரஸ் கட்சி குறித்து பராசக்தி இடம்பெற்றுள்ள கருத்துகளால் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நெல்லை முபாரக், "இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது என்ன நடந்ததோ அதை தான் பராசக்தி படத்தில் எடுத்துள்ளார்கள். பராசக்தி திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிற செய்தி என்பது வரலாற்று சிறப்புமிக்கது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை யாராலும் மறக்கடிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications