சீல் வைத்த சென்னை மாநகராட்சி... ஒரே நாளில் ரூ.65.27 லட்சம் செலுத்தி திறந்த ஆல்பர்ட் தியேட்டர்
சென்னை: பழமையான திரையரங்குகளுல் ஒன்றான எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் சொத்து வரி செலுத்தாததால் நேற்று சீல் வைக்கப்பட்ட நிலையில், அதே நாளில் வரிபாக்கியை செலுத்தியதால் மீண்டும் திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து நகராட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்பேற்றதை அடுத்து பழைய வரிபாக்கிகளை கணக்கு பார்த்ததில் மாநிலம் முழுவதும் பல ஆயிரம் கோடி கணக்கில் சொத்து வரி போன்றவை வசூலிக்கப்படாமலேயே இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சொத்து வரியை வசூலிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், நிலுவையில் இருக்கும் அனைத்து வரிபாக்கிகளையும் வசூலிக்க அறிவுறுத்தியது.

வரி வசூலித்த சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், திரையரங்குங்கள், மால்கள், நிறுவனங்கள் என அனைத்தின் சொத்து வரி கணக்கும் சரிபார்க்கப்பட்டு அதன்பேரில் வரி செலுத்த உத்தரவிடப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே முகாம்களும் அமைக்கப்பட்டன. 2 ஆம் தவணை வரி செலுத்துவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்
இதனை அடுத்து நேற்று வரிசெலுத்தாக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன்பேரில் சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் ரூ.51,27,252 சொத்துவரி பாக்கியும் ரூ.14 லட்சம் கேளிக்கை வரிபாக்கியும் வைத்திருந்தது. இருப்பினும் அதை செலுத்தாததால் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

வரி செலுத்தியதால் சீல் அகற்றம்
பல முறை அறிவுறுத்தியும், நோட்டீஸ் அனுப்பியும் திரையரங்க நிர்வாகம் வரி செலுத்தாததன் காரணமாக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர்கள் விளக்கமளித்தனர். இதனை தொடர்ந்து சொத்துவரி மற்றும் கேளிக்கையை வரியை ஆல்பர்ட் தியேட்டர் நிர்வாகம் மாநகராட்சியிடம் காசோலையாக வழங்கியதால் சீல் அகற்றப்பட்டது.

சென்னையில் சுமார் ரூ.730 கோடி வரி வசூல்
சென்னையில் நேற்று வரை சொத்துவரி மற்றும் தொழில் வரியாக சுமார் ரூ.750 கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதில், ரூ.715 கோடி சொத்து வரி எனவும், ரூ.4.21 கோடி தொழில் வரி என்றும் கூறப்படுகிறது. மாநகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கையால் வரி பாக்கி வைத்திருப்பவர்கள் தாங்களாக முன்வந்து வரி செலுத்துவார்கள் என்ற நம்பிக்கை அதிகாரிகளுக்கு ஏற்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications