35 சீட் கேட்கும் காங்கிரஸ்.. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 2, 3 நாட்களில் நடக்கும்.. வெளியான தகவல்!
சென்னை: அடுத்த 2, 3 நாட்களில் திமுக உடன் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி (Congress) திமுக (DMK) கூட்டணியில் கூடுதல் சீட் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி வரும் நிலையில் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ், ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்த குரல்களை எழுப்பி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலர், ஆட்சியில் பங்கு தரவேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை கூடுதல் இடங்களை கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
காங்கிரஸ் இம்முறை கூடுதல் இடங்களை கேட்கும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இன்னும் திமுக முறையான குழு அமைக்கவில்லை. அதேசமயம், திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச காங்கிரஸ் ஒரு குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சென்னையில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "இன்னும் 2 நாட்களில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேச உள்ளோம். அடுத்த 2, 3 நாட்களில் திமுகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும். இரு தரப்பினரும் நடத்தும் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். கூட்டணி குறித்து திமுக எம்.பி கனிமொழியுடன் தொலைபேசியில் பேசினேன்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கிரிஷ் சோடங்கர், "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நன்கு வளர்ச்சி கண்டு வலுவாக உள்ளது. அதனால்தான் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகளும்கூட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன" எனத் தெரிவித்தார்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெறும் ஒவ்வொரு கூட்டணி கட்சியினருடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை 35 தொகுதிகளை கேட்டு வருவதாகவும், அதற்கு திமுக மறுப்பு தெரிவித்து, கடந்த முறையை விட கூடுதலாக 2 அல்லது 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் இரு கட்சிகள் இடையேயான குழுவினர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை தொடங்கியதும் மேலதிக விவரங்கள் தெரியவரும்.












Click it and Unblock the Notifications