சென்னை வானில் தெரிந்த அபூர்வம்! சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்ணால் பார்த்து நெகிழ்ந்த மக்கள்
சென்னை: விண்வெளியில் அவ்வப்போது சில ஆச்சரியமான விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்த்து சென்னை மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
விண்வெளி நாம் நினைப்பதை விட பெரியது. நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது. இன்னும் விளக்கமாக சொல்வதெனில், மனிதர்கள் தோன்றிய காலம் தொடங்கி தற்போது வரை விண்வெளியை புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இன்னும் விண்வெளியை நாம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

சோவியத் ரஷ்யா காலத்தில் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்பட்டனர். அது உலகம் முழுவதும் உள்ள சாமானிய மக்களுக்கும் விண்வெளி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் சாதாரண மக்கள் கூட விண்வெளியை உற்று கவனிக்க தொடங்கியிருக்கின்றனர். இவர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக இன்று விண்வெளியில் முக்கிய மாற்றம் ஒன்று நிகழ இருக்கிறது.
அதாவது, விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தை இன்று நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியும் என நாசா அறிவித்திருந்தது. அதன்படி சென்னை மக்கள் சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்த்திருக்கிறார்கள். இன்று இந்த சர்வதேச விண்கலம் இந்தியாவை கடந்து சென்றது. குறிப்பாக சென்னையில் இருந்து இதனை தெளிவாக பார்க்க முடிந்தது. இரவு 7.09 மணிக்கு தொடங்கி, 7.16 வரை 7 நிமிடங்கள் இதனை தெளிவாக மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

சில இடங்களில் மேக மூட்டம் இருந்தாலும் விண்வெளி மையத்தை சரியாக பார்க்க முடிந்ததாக மக்கள் கூறியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
விண்கல் மழை: இது தவிர தற்போது 'எட்டா அக்வாரிட்' விண்கல் மழை நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. இதனையும் நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
சென்னையில் சற்றுமுன் வெறும் கண்களால் காணப்பட்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்... pic.twitter.com/0sKRam62CY
— Ramesh (@RHoneykumar) May 10, 2024
விண்வெளியில் இருக்கும் சிறு, குறு கற்கள் பூமியின் ஈர்ப்பு விசையால் வளிமண்டலத்தில் மோதும் போது அது பற்றி எரிந்து சாம்பலாகிவிடும். இந்த காட்சியை பார்ப்பது எரிகல் விழுவதை போன்று தோன்றும். காரிருள் வானிலை சிறிய ஒளிக்கீற்று மிகவும் அழகானதாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் இந்த நிகழ்வு நடக்கும். இதுதான் விண்கல் மழை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாதம் 'எட்டா அக்வாரிட்' விண்கல் மழை பொழிந்து வருகிறது. ஹேலி வால் நட்சத்திரம் நமது சூரியனை 75-79 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இப்படி சுற்றி வரும் போது ஏராளமான தூசுகளை விட்டு செல்கிறது. இந்த தூசுக்களின் ஒரு பகுதிதான் எட்டா அக்வாரிட் என அழைக்கப்படுகிறது.
இந்த விண்கல் மழையை வெறும் கண்களால் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இதனை பார்க்க முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கிய இந்த விண்கல் மழை, இன்றும் நாளையும் உச்சத்தை எட்டும். இந்த விண்கற்கள் சுமார் 2038 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும். இந்த வேகத்தில் அந்த கற்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிடும். எனவே பயப்பட தேவையில்லை.
அதேபோல இந்த கண்கொள்ளா காட்சியை ஒளி மாசு குறைவாக உள்ள இடத்திலிருந்த நன்கு பார்க்க முடியும். இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவில் இதனை தெளிவாக பார்க்க முடியும். இந்தியாவில் பெங்களூரில் இதனை பார்க்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. சென்னையில் இருப்பவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள வைனு பப்பு விண்வெளி ஆய்வு மையம் அருகில் ஒளி மாசு குறைவாக இருப்பதால் அங்கிருந்து பார்க்க முயற்சிக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications