சீமான், நிர்மலா, செங்கோட்டையன், அண்ணாமலை.. வெறும் 24 மணி நேரத்தில்.. தமிழக அரசியலே ஆடிப்போச்சே!
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள், களேபரங்கள் ஏற்பட்டு உள்ளன. அப்படி கடந்த 24 மணி நேரத்தில் என்னென்ன அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன என்று இங்கே பார்க்கலாம்.
சென்னை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முன்னாள் எம்பியான கேசி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். அதிமுக ஒருங்கிணைந்தால் வெற்றிக்கு வாய்ப்பு என்று தொடர்ந்து பேசி வந்த கேசி பழனிசாமி திடீரென நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சென்னையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்ததாக தகவல் வெளியானது. கிண்டி தனியார் ஹோட்டலில் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்ததாக கூறப்பட்டது.
சீமான் விளக்கம்
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. அதேபோல், சென்னையில் தங்கியுள்ள நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதை தற்போது சீமான் மறுத்துள்ளார். நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என்று சீமான் மறுத்துள்ளார்.

செங்கோட்டையன் மீட்டிங்
இன்னொரு பக்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனை பொருத்தமட்டில் அவர் ஏற்கெனவே டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் சந்தித்து பேசியுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கோட்டையன் டெல்லி பயணம்
சமீபத்தில்தான் செங்கோட்டையன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.. இந்த சந்திப்பில், அதிமுக தொடர்பானதும், எடப்பாடி பழனிச்சாமி தொடர்பானதுமான பல்வேறு விவகாரங்கள் பேசப்பட்டிருக்கிறது என தகவல் பரவியிருந்தாலும் செங்கோட்டையனின் இந்த டெல்லி பயணத்தில் வெளிவராத ரகசியம் ஒன்று இருக்கிறது.
அதாவது, செங்கோட்டையனுக்கு எதிராக அமலாக்கத்துறை சம்மந்தப்பட்ட ஒரு வழக்கு நீண்ட வருடங்களாக அப்படியே இருந்து வருகிறது. அவரை நீண்ட காலமாக உறுத்திகொண்டு இருக்கும் வழக்கு அது. அந்த வழக்கு எப்போது லைம் லைட்டிற்கு வந்தாலும் அது தனக்கு சிக்கல் உருவாகலாம் என கணக்குப் போட்டுள்ளார் செங்கோட்டையன். அதற்கேற்ப இந்த ரகசியம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தெரிந்துள்ளது.
தனக்கு எதிராக இந்த வழக்கை எடப்பாடி பயன்படுத்துவதற்கு முன்பு, வழக்கை சரி செய்து விட வேண்டும் என திட்டமிட்டுத்தான் பாஜகவின் அரசியலுக்கு அடிபணிந்தார் செங்கோட்டையன். அந்த வகையில்.. இந்த வழக்குப் பற்றி நிர்மலா சீதாரமனை சந்தித்தார். அவர் வழியாக அமித் சாவை சந்தித்தார் செங்கோட்டையன். அவரிடம்.. இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. சந்திப்பு சாதகமாக இருந்துள்ளது. இதனால் வழக்கு பயம் இல்லாமல் தமிழகம் திரும்பினார் செங்கோட்டையன் என்கிறார்கள் இவரது டெல்லி பயண ரகசியத்தை அறிந்த நமது சோர்ஸ்கள்.
அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் உள்ளிட்ட செய்திகள் வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் தமிழக அரசியலில் அடித்து ஆட தொடங்கி உள்ளாரோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை..பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போது இதேபோல் செய்திகள் வந்தன. தற்போது நிர்மலா சிதாராமன் கை ஓங்கி உள்ள நிலையில் அண்ணாமலை எதிர்காலம் குறித்த விவாதம் உச்சம் அடைந்துள்ளது.
எடப்பாடி பாஜக நெருக்கம் இன்னொரு பக்கம்
டெல்லி பயணம் மூலம் அதிமுக - பாஜக கூட்டணியை அதிகாரபூர்வமற்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்.. செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடத்தினார். சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிமுக அலுவலகத்தை பார்வையிட டெல்லி வந்ததாக கூறிய எடப்பாடி பழனிசாமி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தினார். முதலில் அதிமுக நிர்வாகிகளை கூட்டாக சந்தித்த அமித்ஷா, பிறகு எடப்பாடி பழனிசாமி உடன் தனியாகவும் பேசியுள்ளார்.
அமித் ஷா - எடப்பாடி நடத்திய மீட்டிங்கில் டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கேட்கப்படாது. இதற்கான அழுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படாது. அதோடு பாஜக டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்தால் கூட அதை எடப்பாடி பழனிச்சாமி கேட்க கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவில் இனி ஓ பன்னீர்செல்வம் சேர்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. வேண்டுமென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இப்படி ஒரே டெல்லி பயணத்தில் எடப்பாடி இரண்டு மாங்காய் அடித்துள்ளார். இந்த நிலையில்தான் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சீமானும் வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications