விஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் கூப்பிட்டாங்க.. திருமா தான் வெளியிட்டிருக்கணும் - சீமான் பரபர!
சென்னை: அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டது பற்றி பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர் என அவர் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் அழைத்தனர். முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரையும் அழைத்திருந்தனர். அம்பேத்கர் பற்றிய நூலை திருமாவளவன் வெளியிட்டு நான் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

எனக்கு அம்பேத்கர் பற்றி பேச யாரும் மேடை அமைத்துத் தர வேண்டியதில்லை. எல்லா நாளும் நான் பேசுவேன். தம்பி விஜய், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதை வரவேற்கிறேன். அம்பேத்கரை மக்கள் மத்தியில் யார் கொண்டு சேர்த்தாலும் மகிழ்ச்சி தான்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சீமான், "ஒரு ஐபிஎஸ் அதிகாரி செய்கிற தவறால் ஆயிரக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கெட்ட பெயர் உண்டாகிறது. ஒரு கட்சியை எதிர்த்து தொடர்ச்சியாக குரல் செய்தியை வெளியிடுவது, கைது செய்து அலைபேசியில் உள்ள குரல் செய்தியை எடுத்து அதை ஒரு கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு கொடுத்து அதை வெளியிடுவது என ஒருவர் தொடர்ந்து செய்கிறார். அதை இந்த அதிகாரம் ரசிக்கிறது. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதும், அதற்கு முன்பும் இதுபோன்று நடந்துள்ளதா? அதை எதிர்கொள்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் நடந்த 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது நான் இப்போது சொல்கிறேன் அவருடைய மனசு முழுக்க முழுக்க இன்றைக்கு நம்மளோட தான் இருக்கிறது" என்றார்.
விஜய்யின் இந்தப் பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி உள்ளது. விஜய்யின் இந்த பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "திமுக அல்லது திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications