10 வருஷத்துக்கு அப்புறம் கேஸா? இதுதான் பாஜகவின் சாதனையா? அருந்ததிராய் விஷயத்தில் கண்சிவந்த சீமான்
சென்னை: பிரபல மனித உரிமை செயற்பாட்டாரும், எழுத்தாளருமான அருந்ததிராய் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டெல்லி ஆளுநர் அனுமதியளித்துள்ள நிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசின் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் நடவடிக்கை சரியானது கிடையாது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இப்படி இருக்கையில் காஷ்மீர் குறித்து கடந்த 2013ம் ஆண்டு அருந்ததிராய் பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. இந்த முயற்சியின் ஓர் அங்கமாக டெல்லி துணை நிலை ஆளுநர் அருந்ததிராய் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதியளித்தார். இந்த விவகாரம் தற்போது புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்லி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மனித உரிமைப் போராளி, தோழர் அருந்ததி ராய் மீது பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிய டெல்லி ஆளுநர் அனுமதித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் பேசியதற்காக 13 ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கு பதிவதென்பது பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும். அக்கருத்தரங்கில் அன்புச்சகோதரி அருந்ததிராய் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை, பின்னர் இணைக்கப்பட்டது என்று பேசியது வரலாற்று உண்மையாகும். அதனை பேசியதற்காக இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவதென்பது சனநாயகப் படுகொலையாகும்.
கருத்துச்சுதந்திரம், பேச்சுரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். அரசுக்கு எதிராகப் பேசினாலே வழக்கு பதிவதும், சிறையிலடைத்து கொடுமை புரிவதும்தான் பத்தாண்டுகால பாஜக அரசின் ஒற்றை சாதனையாகும். கல்புர்கி, கௌரி லங்கேஷ் என தங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தாலே கொலை செய்யும் பயங்கரவாதிகளை சுதந்திரமாக உலவ அனுமதிக்கும் கொடுங்கோலர்களின் ஆட்சியில் மனித உரிமை போராளிகள் பயங்கரவாதிகளாகத் தெரிவதில் வியப்பில்லை.

பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில அரசிற்கு ஒவ்வொரு நாளும் இடையூறு அளித்து சனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் பணியை செவ்வனே புரிவதோடு, தற்போது கூடுதலாக சமூக அநீதிக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தும் சட்டவிரோதச் செயலிலும் ஈடுபட்டுள்ளது அதிகார அத்துமீறலின் உச்சமாகும். அதனை பின்புலத்திலிருந்து தூண்டும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கிற்கு வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஆகவே, மனித உரிமைப்போராளி தோழர் அருந்ததிராய் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கினை டெல்லி ஆளுநர் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications