பாதியில் போய்ட்டானே! ‛தேவர் மகன்’ பார்த்ததும் இரவில் மாரிமுத்து செய்த சம்பவம்.. கலங்கிய சீமான்
சென்னை: நடிகர் மாரிமுத்து மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த வேளையில், ‛தேவர் மகன்' படத்தை பார்த்த இரவில் மாரிமுத்துவும், அவரும் நடு சாலையில் செய்த சம்பவத்தை நினைவுப்படுத்தி கலங்கியதோடு மாரிமுத்து குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சினிமா இயக்குனரும், நடிகருமாக இருப்பவர் மாரிமுத்து. இவர் 'பரியேறும் பெருமாள்' படத்தில் கதாநாயகி கயல் ஆனந்தியின் தந்தையாக நடித்தது அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மூலம் அவர் மிகவும் பிரபலமடைந்தார். அவருக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று காலை 'எதிர்நீச்சல்' சீரியலுக்காக டப்பிங் பேசியபோது மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மாரிமுத்துவின் மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரிமுத்து திரையுலக பயணத்தின் தொடக்க காலத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானுடன் சேர்ந்து பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் மாரிமுத்து மறைவு குறித்து சீமான் கூறியதாவது:
என் தம்பி மாரிமுத்துவுக்கு இப்படி ஆகிவிட்டது என அறிந்ததும் என்னால் கொஞ்சம்நேரம் எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. அதிர்ச்சியாகிவிட்டேன். நானும், மாரிமுத்துவும் சமகாலத்தில் திரையுலகிற்கு வந்தோம். நான் சிவகங்கையிலும் இருந்தும், அவர் வருஷநாடுவில் இருந்தும் வந்தார். நாங்கள் ஒரே வீட்டில் தான் தங்கியிருந்தோம்.
அப்போது அண்ணன் ராஜ்கிரண் படமான அரண்மனை கிளியில் வேலை செய்தார். அதன்பிறகு எனது முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியில் அசோசியேட்டாக இருந்தார். இதில் என்னவென்றால் அவர் ஆகச்சிறந்த திரைப்பட ரசிகர், நல்ல வாசகம். நிறைய படிப்பார். கையெழுத்து ஓவியம் போல் இருக்கும். இதனால் அவரை அனைவரும் வைத்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். மேலும் விவாத திறமை நன்றாக இருக்கும்.
முதலில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் அவர் இருந்தார். அதன்பிறகு என்னுடன் பணியாற்றினார். நாங்கள் ரொம்ப நாள் நட்பாக இருந்தோம். பின்னர் இயக்குனர் வசந்த், தம்பி எஸ்ஜே சூர்யாவுடன் பணியாற்றினார். அதன்பிறகு படம் இயக்கினார். படம் இயக்கியதை விடவும் நடிப்பில் அவரது உடல்மொழியில் சிறந்து விளங்கினார். மாரிமுத்துவுக்கு மிகையில்லாத இயல்பான திரைமொழி, நடிப்பு இருக்கும். அப்படியான ஆற்றல் கொண்டவர் தான் மாரிமுத்து.
இப்படி நல்லா வந்து கொண்டிருந்தார். நிறைய படங்களில் நடித்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் நாங்கள் வெளியே சந்தித்து கொள்வோம். நான் சந்திக்கும்போது நன்றாக வந்து கொண்டிருக்கிறேன் சார். நிம்மதியாக இருக்கிறது சார் என கூறினார். இத்தகைய சூழலில் இந்த மாதிரியான பேரதிர்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை.
அவருக்கான களம் காத்திருக்கும்போது இப்படி பாதியில் விட்டுவிட்டு போவார் என நினைக்கவில்லை. உண்மையில் பேரதிர்ச்சியாக உள்ளது. என் அப்பா மணிவண்ணன் போல் அனைத்து தளங்களிலும் சிறந்த நடிகராக வளர்ந்து வருகிறார் என நினைத்து கொண்டிருந்த வேளையில் இப்படி ஆனது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

எனக்கும், மாரிமுத்துவுக்கும் இடையேயான தனிப்பட்ட உறவு என்பது அண்ணன்-தம்பி போன்ற உறவு. எனக்கு நன்றாக நினைவிருக்கு. ‛தேவர் மகன்' பார்த்துவிட்டு ஒரு இரவு முழுவதும் நடு சாலையில் வந்து விடிவிடிய பேசினோம். ஒவ்வொரு கட்டமும், ஒவ்வொரு காட்சியும் எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பேசியது இன்னும் நினைவிருக்கு. அவரது திறனாய்வு விதம் அவ்வளவு அழகாக இருக்கும்.
மாரிமுத்து இலக்கிய வாசகன், நல்ல எழுத்தாளர். அன்பு சகோதரனை இழந்துவிட்டேன் என ரொம்ப வருந்துகிறேன். அவரது குடும்பத்துக்கு ஆறுதல், அன்பு சகோதரன் மாரிமுத்துவுக்கு கண்ணீர் வணக்கத்தை போல் தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications