உள்ளூர்க்காரன் மாட்டுகறி சாப்பிட்டா கொல்வீங்க.. ஊரானுக்கு மட்டும் ஊட்டி விடுவீங்களா.. சீமான் பொளேர்
டிரம்ப்புக்கு அளித்த உணவு குறித்து சீமான் காட்டமான கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "மாட்டுக்கறி வெச்சிருந்ததுக்காக அப்பா, மகனை அடிச்சே கொன்னீங்களே... அது எப்படி ஊரானுக்கு ஊட்டிவிடுவீங்க, உள்ளூர்காரன் சாப்பிட்டா கொன்னுடுவீங்களா? எப்படி உங்க கதை? டிரம்புக்கு 5 விதமா செஞ்சு வெச்சீங்களாமே... ஏன்? எதுக்கு தாஜ்மஹாலை கூட்டிட்டு போய் காட்டினீங்க? உங்க படேல் சிலையை காட்ட வேண்டியதுதானே" என்று சீமான் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் வருகையை விமர்சித்து பேசியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:
"மாட்டுக்கறியை குளிரூட்டியில் வைத்திருந்தார்கள் என்பதற்காகவே அப்பாவையும் மகனையும் அடித்தே கொன்றீர்களே, கட்டி வைத்து கொன்றீர்களே.. அப்படிப்பட்ட நீங்க டொனால்ட் டிரம்ப் வரும்போது மட்டும் ஏன் 5 வெரைட்டியா மாட்டுக்கறியை செஞ்சீங்க?
மாட்டுக்கறி
அது எப்படி ஊரானுக்கு மட்டும் ஊட்டிவிடுவீங்க, உள்ளூர்காரன் சாப்பிட்டா கொன்னுடுவீங்களா? எப்படி உங்க கதை? டிரம்புக்கு எதுக்கு 5 விதமா செஞ்சு வெச்சீங்களாமே ஏன்? மோடி இருக்காரே, தொலைக்காட்சியில் பேசுவார், வானொலியில் பேசுவார், ஆனா பாராளுமன்றத்தில் மட்டும் பேசவே மாட்டார்.. ஐயோ என்ன பெத்த அம்மா.. கொடுமை!
குஜராத் மாடல்
உங்களுக்கு புரியும்படி ஒன்னு சொல்றேன்.. காடுகளில் வாழ்ந்தவர்கள் எந்த சாதி சான்றிதழ்களை வைச்சிந்திருப்பாங்க? டெல்லியில் 13 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்காங்களே... அவங்க என்ன சான்றிதழ்களை வெச்சிருக்காங்க? குஜராத் மாடல் என்ன என்றால் தெரியுமா? குடிசைகள் தெரியாமல் 7 அடிக்கு சுவர் எழுப்பி மறைச்சிடுவதுதான்.. இதுதான் அந்த குஜராத் மாடல்.. கற்களை வெச்சு சுவர் எழுப்பி மறைச்சீங்களே, அந்த கற்களை வெச்சே அந்த ஏழைகளுக்கு வீடு கட்டி தந்திருக்கலாமே? அத்தனையும் ஏமாற்று.
ஆதித்யநாத்
தாஜ்மஹாலை சுற்றுலா பட்டியலில் இருந்தே நீக்கிட்டாங்க.. டிரம்புக்கு எதை காட்டுறதுன்னே தெரியல.. அதனால அவசர அவசரமா தாஜ்மஹாலுக்கு வெள்ளை அடிச்சாங்க.. ஐயா இருக்காரே, நம்ம பெரிய ஐயா.. அங்கே வரலன்னு சொல்லிட்டாரு.. அதனால ஆதித்யநாத் கூடவே வர்றாரு. டிரம்ப் எப்படிப்பட்டவருன்னு பாருங்க.. காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குள்ள கொண்டு போய்விட்டால், அண்ணல் காந்தியின் படத்துக்கு கீழே ஒரு குறிப்பேடு உள்ளது.. அதில ஏதாவது "இந்தியா", "ஃபாதர் ஆப் தி நேஷன்" ன்னு இப்படி எழுதலாம் இல்லை? இவர் எழுதுறாரு.... "மோடி, மோடி, மோடி, மோடி"ன்னு!!
படேல் சிலை
ஒரு நாட்டின் தலைவன் இன்னொரு நாட்டுக்கு போனால், அந்த நாட்டின் வரலாறு என்ன, கலை என்ன, மூத்த தலைவர்கள் யார் இதெல்லாம் தெரிஞ்சிட்டுதானே டிரம்ப் பயணிக்கணும்? இவங்க ஏன் தாஜ்மஹாலை கூட்டிட்டு போய் காட்டினாங்க.. நீங்கதான் 3 ஆயிரம் கோடிக்கு வல்லபாய் படேல் சிலையை திறந்து வெச்சிருக்கீங்களே.. ஏன் அதை காட்டலை?
நன்றிக்கடன்
ஏன்னா, இந்தியாவின் அடையாளம் என்பது உலகத்தில் பார்வையில் காந்திதான். படேல் கிடையாது... 3 ஆயிரம் கோடியில் சிலை.. அதன் காலடியில் பிச்சைக்காரர்கள், அதான் இன்றைய நிலை.. காந்தியை கொன்றபோது ஆர்எஸ்எஸ் மீது விதிக்கப்பட்ட தடையை 16 மாதங்களில் நீக்கியவர் படேல்.. அந்த நன்றிக் கடனுக்காக அந்த சிலையே.. இவர்கள்தான் படேலை கொண்டாடுவார்கள்" என்றார்.