“புளுத்துப்போன புளுகு.. பாஜகவின் குரல்” - சீமானுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
சென்னை: "உழைப்பாளி மக்களுக்கு எதிராகப் பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் சீமான். வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வது என்ற முறையில் தான் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புளுத்துப்போன புளுகை மீண்டும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்." என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு மாற்றாக VB G RAM G என அழைக்கப்படும், விக்சித் பாரத் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் நிதிக்கு மாநில அரசின் பங்களிப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன.
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "100 நாள் வேலைத்திட்டதையே நாங்கள் ஏற்கவில்லை. தாயக் கட்டை, பல்லாங்குழி, சீட்டு ஆடுவது, கிளித்தட்டு ஆடுவது தான் 100 நாள் வேலையில் நடைபெறுகிறது. தூர்வாரிய குளங்கள் எத்தனை? போடப்பட்ட சாலைகள் எவ்வளவு? உழைக்காமல் இருப்பதும் ஒரு வகை திருட்டு என சொன்ன காந்தியின் பெயரை அவமதிப்பதாக தான் இத்திட்டம் உள்ளது." எனத் தெரிவித்தார்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தொடர்ச்சியாக எதிர்த்து வரும் சீமான், இந்த திட்டத்தால் விவசாயம் செய்ய ஆள் கிடைக்காத நிலை உள்ளதாகவும், மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே, சீமான், 100 நாள் வேலை திட்டத்தில் மக்கள் விளையாடுவதாகக் கூறியுள்ளார்.
சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், "உழைப்பாளி மக்களுக்கு எதிராகப் பேசுவதையே சீமான் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 100 நாள் வேலை நடந்த ஒரு இடத்திற்காவது அவர் சென்று வந்ததுண்டா? அங்கு முறையான ஆய்வை மேற்கொண்டாரா?
வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வது என்ற முறையில் தான் 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற புளுத்துப்போன புளுகை மீண்டும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியினரின் குரலையே அவர் எதிரொலித்து இருக்கிறார். அவரது இத்தகையப் பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications