சீமானிசம்...இணையத்தை கலக்கும் 'வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை' பஞ்ச் வசனம்
சீமானின் வசனங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. தேர்தலுக்கு இப்போதே தயாராகி விட்டது நாம் தமிழர் கட்சி. சீமானின் வசனங்களும் நாம் தமிழர் கட்சியின் விளம்பரங்களும் இப்போதே வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இப்போதே சத்தமில்லாமல் தயாராகி வருகிறது நாம் தமிழர் கட்சி. சீமானின் பஞ்ச் வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருவது போல நாம் தமிழர் கட்சியினர் என்றாலே நம்பிக்கை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதற்கான வேலையை சமூகவலைத்தளங்களில் தொடங்கி விட்டனர் அந்த கட்சியினர். இணைய தளங்களில் சீமானின் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை என்ற வசனம் வைரலாகி வருகிறது.
நடிகர்களின் பஞ்ச் வசனங்களை ரசிகர்கள் பேசி நடித்து வைரலாக்குவார்கள். ரஜினியின் பஞ்ச் வசனம் அதில் முதலில் இருக்கும். கவுண்டமணியின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற வசனத்தை பலரும் பேசி சிரிப்பார்கள்.
வடிவேலுவின் ஆணியே புடுங்க வேணாம் வசனமும் ரசிகர்களால் அதிகம் பேசப்படுகிற வசனமாக இருக்கிறது. சீமானின் பஞ்ச் வசனங்கள் தமிழக மக்களால் குறிப்பாக இளைஞர்கள் இளம் பெண்களால் அதிகம் ரசிக்கப்பட்டிருக்கிறது.

சீமானின் பஞ்ச் டயலாக்
தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் பேச்சுக்களில் மக்களால் அதிகம் ரசிக்கும் படி பேசுபவர்களில் சீமான் முதல் இடத்தில் இருக்கிறார். சீமானின் பேசும் வீடியோவை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 கோடி முறை பார்த்துள்ளனர்.

சிரிப்பும் டயலாக்கும்
உணர்ச்சி பொங்க பேசும் சீமான் அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசுவார். அப்படி சிரித்துக்கொண்டே பேசும் போது வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை என்று சொல்லும் டயலாக் இப்போது அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

அதிரடி வசனங்கள்
கறுப்பு என்பது தெய்வத்தின் நிறம்...வெள்ளை என்பது பிசாசின் நிறம் என்ற வசனமும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் கொடுப்போம் விவசாயத்தை தேசிய தொழில் ஆக்கி விவசாயிகளை அரசாங்க ஊழியர்களாக மாற்றுவோம் என்ற வசனமும் அதிகம் பேரால் பேசப்படுகிறது. இணைய தளப் பார்வையாளர்களிடம் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

சீமானின் பேச்சை ரசிக்கும் மக்கள்
சீமான் போல் பேசிக் கலக்கும் பெண்கள் என்ற வீடியோவை சுமார் 14 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சீமான் பேசிய எல்லா வீடியோக்களுமே லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. அவரது வாய்ப்பில்லை ராஜா வசனம்தான் அதிகம் பலரால் பேசப்படுகிறது.

தேர்தலுக்கு தயாரான சீமான்
சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த தயாராகி வரும் நாம் தமிழர் கட்சி, சீமானின் பஞ்ச் வசனங்களையும் சீமானிசத்தையும் இளைஞர்கள் மத்தியில் சத்தமில்லாமல் பரப்பி வருகிறது. 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்த தயாராகி விட்டது நாம் தமிழர் கட்சி. பிற கட்சிகள் எல்லாம் கூட்டணி கணக்குகளை போட்டுக்கொண்டிருக்க சீமானோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முதல் களப்பணி வரை கவனத்தை திருப்பியுள்ளது. மக்கள் மத்தியில் சீமானிசம் சென்று சேருமா பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications