விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்பேன்! ஆனால் ஒன்று! கொந்தளித்த நாம் தமிழர் சீமான்
சென்னை: விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்பது தொடர்பான கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் சில கேள்விகளுக்கு கொந்தளிக்கவும் செய்தார்.
சென்னையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விஜயலட்சுமி மன்னிப்பு கேட்குமாறு வீடியோ போட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு சீமான் பதிலளிக்கையில், "நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? 15 ஆண்டுகளாக என்னை அசிங்கப்படுத்தியே இருப்பதற்கு அவரிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா?
கோர்ட்டு சொல்லும் போது மன்னிப்பு கேட்பேன். கோர்ட் இன்னும் சொல்லவில்லை அல்லவா? இதையெல்லாம் ஒரு கேள்வின்னு கேட்கறீங்களே! அந்த பெண் இருக்கும் சமூகத்தில் பிறந்ததற்கு நான் கேவலப்பட்டு வெட்கப்பட்டு சாகலாம். நான் எதற்காக சமரசமா போக வேண்டும்?
திருமணமான ஒருவரை 15 ஆண்டுகளாக தேர்தல் வரும் போதெல்லாம் அந்த பெண்ணை கூட்டிட்டி வந்து வைப்பது. நானே வந்து ஒரு பெண் அவருடைய குடும்பத்துடன் வாழும் போது அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு போய்விட்டார் என நான் சொன்னால் என்னை செருப்பை கழற்றி அடிப்பீர்களா மாட்டீர்களா? சட்டம் என ஒன்று உள்ளது, மனச்சான்று என ஒன்று உள்ளது என்றார்.
அவர் மேலும் பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து பேசினால் திமுக கைக்கூலி என்கிறார்கள். விஜய்யை விமர்சிப்பதால் திமுகவிடம் நான் பெட்டி வாங்கிவிட்டது போல் பேசுகிறார்கள்.
திமுகவை எதிர்த்து பேசினால் ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைக்கூலி என்கிறார்கள். தேர்தலில் திமுக தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது. தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாள் எடுக்கும்.
உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என சொன்னால் உங்களை யார் வரச் சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக் கூடாது. திமுக, அதிமுகவை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்ஜிஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான். விஜய்யை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
வழக்கின் பின்னணி
2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி, சீமான் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு
விசாரணையின் போது, விஜயலட்சுமி மீது சீமான் பேசியதாகக் கூறப்படும் அவதூறான கருத்துகள் குறித்து நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இரு தரப்பினரும் சமரசமாகச் செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதே நேரத்தில், சீமான் தரப்பு விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்யத் தவறினால் சீமானுக்கு எதிரான கைதுக்கான இடைக்காலத் தடை நீக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது. இந்த வழக்கில் சீமான் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
தற்போது என்ன நடக்கிறது?
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். சீமான் தரப்பு மன்னிப்பு கேட்க மறுப்பதாகக் கூறி, அவர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications