என் மகன்கள் இருவருமே ஆங்கில வழியில்தான் படிக்கின்றனர்.. ஏன் தெரியுமா? சீமான் சொன்ன அடடே காரணம்!
சென்னை: தன்னுடைய இரு மகன்களுமே ஆங்கில வழியில்தான் படிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சியின் சில வேட்பாளர்கள், வேட்பு மனுத் தாக்கலின் போது தமிழில் படிக்க முடியாது என தெரிவித்திருந்தனர். இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்க அதை நாம் தமிழர் வேட்பாளர்கள் திரும்ப ஒப்பித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

மேடைக்கு மேடை மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழர் என முழங்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கே தமிழ் படிக்கத் தெரியாதா? என்கிற விமர்சனங்களும் கடுமையாக முன்வைக்கப்பட்டன. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு சீமான் அளித்த பதில்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் பாண்டியன் ஓமன் நாட்டில் படித்தவர். அவருக்கு தமிழ் வரவில்லை. என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமாக இல்லை.
வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும். நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும்.
என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்விதான் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும் ; படிக்காதவர்களுக்கும் அரசு பணி தர வேண்டும் என பேசும் சீமான் தன் பிள்ளைகளை தமிழ் வழி அரசு பள்ளிகளில் சேர்க்காமல் ஆங்கில வழியில் சேர்த்துவிட்டு அதை நியாயப்படுத்துவது சரியானது அல்ல என்கிற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications