“நான் ஜெயிப்பேன் என கணித்திருந்தேன்”.. டெபாசிட் இழந்த நிலையில் ஆதங்கத்தோடு பேசிய சீமான்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளார். நாதக வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது. நாதக வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ள நிலையில், சீமான் ஆதங்கத்தோடு பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 இடங்களிலும் அதிமுக 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 234 தொகுதியிலும் தனி நபராக கூட்டம் போட்டு பிரசாரம் செய்தார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனாலும், அவருக்கு கடந்த லோக்சபா தேர்தலில் கிடைத்த 35 லட்சம் வாக்குகள் கூட, இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. அப்போது கிடைத்த 8 சதவீதம் ஓட்டுகளால் அவருக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்தது.
ஆனால், அடுத்த தேர்தலிலேயே அந்த வாக்கு சதவீதம் அனைத்தும் மாயமாகி விட்டது. இந்த தேர்தலில் அவருக்கு 19 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகள், மொத்த ஓட்டுகளில் 4 சதவீதம் மட்டுமே இந்த தேர்தலில் கிடைத்துள்ளன. சீமான் போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் அவருக்கு நான்காமிடமே கிடைத்துள்ளது. டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளார் சீமான்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாக்குகளை வாரி வழங்கியுள்ள தமிழக மக்கள் 15 ஆண்டுகளாக களத்தில் நிற்கும் சீமானுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதங்கத்தோடு சீமான் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் பேசியுள்ள சீமான், "இவ்வளவு போராடியவர்களுக்கு, இவ்வளவு மாற்று அரசியலை எடுத்து வைத்தவர்களுக்கு இன்னும் 10 லட்சம் வாக்குகளை அளித்திருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது. நான் சட்டசபைக்குள் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இல்லை. நாட்டை வெல்லாமல் 2, 3 சீட்டை வென்று என்ன ஆகப்போகிறது. ஆனாலும், போயிருக்கலாம். இந்த தமிழ்ச் சமூகத்தின் குரலாக சட்டசபையில் பேசியிருக்கலாம்.
ஆனால், அதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அது நம் தோல்வி இல்லை, மக்களின் தோல்விதான். என் பிள்ளைகளின் உழைப்பு அசாத்தியமானது. நானே எதிர்பார்த்தேன். நான் வென்றுவிடுவேன், இன்னும் ஐந்தாறு பேர் வெல்வோம் என நான் கணித்திருந்தேன். இன்றைக்கு இல்லையென்றாலும் நாளை செல்வோம். பெரும் பாடு பட்டுள்ளோம்.
இன்னும் 10 ஆண்டுகள் போராடியும் உறுதியாக வெற்றி பெறுவோம். அதில் எந்த மாற்றும் இல்லை. எந்தக் காலத்திலும் தடம்பிறழ மாட்டோம். தன்னலத்திற்காக சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நமக்கு அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. நூறு விழுக்காடு மக்களை நம்புகிறோம். மக்கள் நம்பும் வரை போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications