Seeman: எனக்கு சொந்தமாக மூளை இருக்கு! என்னை ஏன் பாஜக கூட்டணில பிடிச்சு தள்ளுறீங்க! சீமான் ஆவேசம்
சென்னை: எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது. என்னை ஏன் பாஜக கூட்டணிக்குள் பிடித்து தள்ளுகிறீர்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக ஆட்சியை தக்க வைக்கும் என்றும் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் முனைப்புடன் போராடி வருகிறார்கள்.

அதே வேளையில் மேற்கண்டவர்களை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகமும் , நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுகிறார்கள். பாமகவுக்குள் உள்கட்சி மோதல் இருந்து வருவதால் அவர்கள் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என தெரியவில்லை. இந்த நிலையில் அண்மையில் சென்னைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்த போது அவரை சீமான் சந்தித்து பேசியிருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி
அப்போது முதலே பாஜகவுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணியா என்ற கேள்வி வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சட்டசபை தேர்தல்
அப்போது அவரிடம் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா என செய்தியாளர்கள் கேட்ட போது, "வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். பாஜகவுடன் நான் கூட்டணி என என்னை ஏன் பிடித்து தள்ளுகிறீர்கள்.
மூளை இருக்கு
நான் யாருடைய அறிவுரையையும் கேட்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு சொந்தமாக மூளை உள்ளது. சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. நான் என்ன நினைக்கிறேனோ அதைதான் செய்வேன். திரும்ப திரும்ப கேள்வி எழுப்புவதை நான் வெறுக்கிறேன்.
தனித்து போட்டி
நான் தனித்துதான் போட்டியிடுவேன். திரும்ப திரும்ப அதை சொல்ல முடியாது. நீங்கள் வேற கேளுங்கள். என் கால்களை நம்பித்தான் நான் பயணம் செய்கிறேன். அண்ணாமலை மாற்றம் குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களது கட்சியின் உள்கட்சி விவகாரம். புதிய தலைவராக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து சொல்லலாம். வாழ்த்துகள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
வக்ஃப் வாரிய திருத்த சட்டம்
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
ஆபத்தான போக்கு
அப்போது சீமான் கூறுகையில் வக்ஃப் வாரிய சட்டத்தில் ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இது ஆபத்தான போக்கு! இந்து மக்களை மகிழ்விப்பதற்காக இது போன்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை வசம் 38 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது என்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரமா?
அது தொடர்பாக விசாரிக்க இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கொண்ட குழுவை அமைத்தால் ஏற்பார்களா? திருப்பதி தேவஸ்தானத்தில் 2 இஸ்லாமியர்களை சேருங்கள் பார்க்கலாம். சட்டத்தை இயற்றிவிட்டார்கள். அதை மாநில அரசுதான் நிர்வகிக்கலாம் என கூற வேண்டும். ஆனால் மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் என்பது சரியல்ல.
டிரம்புடன் கூட்டணி
அதிமுக- பாஜக கூட்டணி குறித்து எதையும் சொல்ல முடியாது. எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்வது கண்ணியமாகவோ நாகரீகமாகவோ இருக்காது. எங்களை பொருத்தமட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒன்றுதான். 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என கூறிவிட்டு தனக்கே உரித்தான சிரிப்பை சிரித்துவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications