மைக் சின்னத்திலேயே போட்டி! பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் கேட்டது கிடைத்திருக்கும்! சீமான் காட்டம்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மைக் சின்னத்திற்கு பதில் படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்ட நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. மைக் சின்னத்தையே உறுதி செய்தது.
இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறோம். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னமும், ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் கிடைத்தது.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். என் வாழ்நாளில் சமரசத்திற்கே பேச்சில்லை. கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டால்தான் சீமான் விவசாயியா என்ன?, உண்மையில் நான் விவசாயிதான். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை நாளை முதல் தொடங்குகிறேன்.
தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. மாற்றத்துக்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்துதான் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கியது. இதற்கு பதிலாக படகு அல்லது பாய்மரம் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியினர் மின்னஞ்சல் மூலமும் நேரிலும் மனு அளித்திருந்தனர்.
தமிழக லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சீமான் கட்சியின் 40 வேட்பாளர்களும் அண்மையில் அறிவிக்கப்பட்டனர். ஒரே மேடையில் வைத்து சீமான் 40 பேரையும் அறிமுகம் செய்தார். அவர்களில் 20 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள்.
சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்த போது சர்ச்சைக்குரிய வகையில் உறுதிமொழி ஏற்றனர். இதனால் அவர்களுடைய வேட்புமனுக்கள் ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications