நிலத்தடி நீருக்கு வரியா? தாய்ப்பாலுக்கு வரி விதிப்பதற்கு ஒப்பானது! நாம் தமிழர் சீமான் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளாண்மைக்கு பயன்படும் நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது, குழந்தை குடிக்கும் தாய்ப்பாலுக்கு வரிவிதிப்பதற்கு ஒப்பானது; இக்கொடுங்கோன்மை முடிவை பாஜக அரசு கைவிட வேண்டும் எனவும், இல்லையென்றால், வரிக்கொடுமைகள் தாங்காது அல்லற்பட்டு ஆற்றாது அழும் நாட்டு மக்களின் கண்ணீரே இக்கொடிய ஆட்சியை வீழ்த்தும் பேராயுதமாகிவிடும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வருங்காலங்களில் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து ஒட்டுமொத்த நாட்டையும் மீட்கவியலா பெரும் பஞ்சத்தில் தள்ள வழிவகுக்கும் பாஜக அரசின் இக்கொடிய முடிவு சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.

இந்தியப் பெருநாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக அரசு தற்போது கொண்டுவர முடிவு செய்துள்ள வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் கொள்கை முடிவானது முதன் முதலாக காங்கிரசு தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டதாகும்.

Seeman BJP ntk

கடும் எதிர்ப்பின் காரணமாக கிடப்பில் போட்ட அக்கொடுந்திட்டத்தை தற்போது பாஜக மீண்டும் கொண்டுவர முடிவு செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். வேளாண்மைக்கு நிலத்தடி நீர் எடுக்க மின்சாரம் இலவசம்; ஆனால் எடுக்கப்படும் நீருக்கு வரி என்பது முட்டாள்தனமில்லையா? நிலத்திற்கு வரி, விளைவிக்கும் பயிருக்கு வரி, விளைபொருட்களை எடுத்துச்செல்ல சாலை வரி, சுங்க வரி, எரிபொருள் வரி, அதனை விற்பதற்கு விற்பனை வரி, போதாக்குறைக்கு ஜிஎஸ்டி வரி என்று வரிக்கு மேல் வரி செலுத்தி வரியால் விவசாயிகள் வயிறும், வாழ்வும் எரிந்து இருளாகி போயுள்ளது.

ஓரவஞ்சனையாக செயல்பட்டு இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரசு - பாஜக அரசுகள் தமிழ்நாட்டு நதிநீர் உரிமையை தட்டிப்பறித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கியது போதாதா? முப்போகம் விளைந்த தமிழர் நிலத்தில், நிலத்தடி நீர் மூலம் ஒருபோகம் விளைவித்து வரும், தமிழக விவசாயிகளின் வயிற்றிலும் மோடி அரசு அடிக்க முயல்வது நியாயம்தானா?

நிலமும், நீரும், காற்றும், ஒளியும், மழையும், மலையும், கடலும், காடும் பாஜக ஆட்சியில் சட்டம் போட்டு உருவாக்கப்பட்ட வளர்ச்சி திட்டம் அல்ல; மாய, மந்திரங்கள் சொல்லி பெற்ற வரமும் அல்ல; அவை இயற்கை அன்னை அனைத்து உயிர்களுக்கும் தந்த அருட்கொடைகள்! நீருக்கு வரி, காற்றுக்கு வரி, சூரிய ஒளிக்கு வரி என்று கண்ணில் கண்ட எல்லாவற்றும் வரி என்றால் அதில் எங்கே இருக்கிறது அறநெறி? ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை (நிஷிஜி) வரியால் பாஜக அரசு நாட்டு மக்களை வாட்டி வதைப்பது போதாதா?

நின்றால், நடந்தால், நாட்டு மக்களுக்கு வரி; எதை விற்றாலும் வரி; எதை வாங்கினாலும் வரி; ஆனால், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களுக்கு பறக்கும் விமானம் முதல் நாடாளுமன்ற உணவகத்தில் உண்ணும் உணவு வரை அனைத்திற்கும் சலுகை; இது யாருக்கான நாடு?

ஏற்கனவே இடுபொருட்கள், விதை, உரம், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளின் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, புழு தாக்கம், பருவகால மாற்றம் என பல்வேறு தடைகள் சூழ்ந்து, வேளாண்மை செய்வதே விவசாயிகளுக்கு தற்காலத்தில் பெரும்பாடாகியுள்ளது. அத்தனை துன்பங்களையும் தாண்டி வேளாண்மை செய்து பயிர் விளைவித்தாலும், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் பெரும்பான்மையான விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி வருகின்றனர்.

அதோடு, ஒன்றிய - மாநில அரசுகள் தங்கள் பங்கிற்கு, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்தும் வேளாண்மையை அழித்து வருகின்றது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென நெடுங்காலமாக வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை வைத்து, போராடி வரும் நிலையில், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத இந்திய ஒன்றிய அரசு நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பது வேளாண்மையை முற்றாக அழிப்பதற்கே வழிவகுக்கும்.

வேளாண்மையை முற்று முழுதாக அழித்தொழித்து, விளைநிலங்களை விட்டு விவசாயிகளை வெளியேற்றி, அதனை கார்ப்பரேட் கைகளில் ஒப்படைத்து நாட்டு மக்களை உணவிற்கு கையேந்த வைப்பதற்கான சூழ்ச்சியே நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் கொடுந்திட்டமாகும். புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்க முனைந்த பாஜக அரசு, வேளாண் பெருங்குடி மக்களின் வரலாறு காணாத பேரெழுச்சி போராட்டம் காரணமாக வேறு வழியின்றி அதனை திரும்பப்பெற்றது. தற்போது அதைவிடவும் மிகப்பெரிய புரட்சியை, விவசாயிகளின் எழுச்சியினை இக்கொடிய முடிவால் பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும்.

ஆகவே, இந்திய பெருநாட்டில் மிகப்பெரிய பஞ்சத்திற்கும் - பேரழிவிற்கும் வழிவகுக்கும் வேளாண்மைக்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முடிவை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+