வெட்கக்கேடு! நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல.. பாரதத் தாய் தான்.. சீமான் ஆத்திரம்!
சென்னை: பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல, பாரதத் தாய் தான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் வன்முறையின் உச்சமாக 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது.

அந்த வீடியோவில் மணிப்பூர் கலவரத்தின் போது கலவரக்காரர்கள் சிலர் பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச்செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சம்பவம் குறித்து நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சியினர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தக் கொடூரச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குக்கி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பான்மை மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசு தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிய பாஜக இரண்டு பழங்குடி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது?
கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனித தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவிற்கு செயற்கைக்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரீக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் பிரதமர் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா? இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா?
மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான். பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications