பெட்ரோல் குண்டு: இஸ்லாமியர்களை ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தில் கைது செய்தால் பிரச்சனை வரும்...சீமான்
சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் இஸ்லாமிய பிள்ளைகளை ஆதாரம் இல்லாமல் சந்தேகத்தில் கைது செய்தால் தேவை இல்லாத பெரும் பிரச்சனை வரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: மகாத்மா காந்தி படத்தை போலி துப்பாக்கியால் சுட்டு செருப்பு மாலை அணிவித்தவர்கள் யார்? மகாத்மா காந்தி பொதுவானவர் என்றால் சாவர்க்கர் எதற்கு வருகிறார்? காந்தியும் சாவர்க்கரும் ஒன்றா?
கோழையை போய் வீர சாவர்க்கர் என பேசுகிற பாஜகவினர் எப்படி காந்தியை பற்றி பேச முடியும்? காந்தி பொதுவானவர் என்றால் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு எதற்கு சிலை வைத்தீர்கள்? இந்தியாவின் அடையாளம் காந்தியும் அண்ணல் அம்பேத்கரும்தான். அப்புறம் எதற்கு பட்டேலுக்கு ரூ3,000 கோடியில் சிலை?
எடப்பாடி கூட அனுமதிக்கலையே! ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதிக்கு இதுதான் காரணமா? டவுட் கிளப்பும் சீமான்!
வல்லபாய் பட்டேலுக்கு சிலை எதற்கு?
காந்தியை சுட்டுப் படுகொலை செய்ததற்காக ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை 16 மாதங்களில் நீக்கியவர் என்பதால்தான் நன்றிக் கடனுக்காக பட்டேலுக்கு சிலை வைத்தீர்கள்.. இந்தியாவுக்கு வெளியே போனால் வல்லபாய் பட்டேல் யார் என தெரியாது. நாட்டைவிட மதம்தான் பெரிது என கருதி இந்த நாட்டை ஆட்சியாளர்கள் ஆண்டால் நாடு சுக்கு சுக்காக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் அம்பேத்கர். இன்று போல் நடக்கும் என்பது அம்பேத்கருக்கு தெரியும். அதனால்தான் சொல்லி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.
முஸ்லிம்கள் கைதும் எச்சரிக்கையும்
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் இஸ்லாமிய பிள்ளைகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சான்றுகள் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை. ஆகையால் தப்பா போய்விடும் என எச்சரிக்கையோடு செல்கிறேன். இஸ்லாமிய பிள்ளைகள் அப்படி செய்திருந்தால் சான்றுகள் இருந்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்து இஸ்லாமிய பிள்ளைகளை அடையாளம் காட்டினால் அது தேவையில்லாத பெரும் பிரச்சனையாக வரும்.
கோவில் மீட்புகள்
திருப்பதி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில்களை தமிழக பாஜகவினர் மீட்டு வந்துவிட்டால் தமிழக கோவில்களையும் தனியார் வசமாக கொடுத்துவிடலாம். அரசு கட்டுப்பாட்டில் இருந்த போதே 1,200 சிலைகள் கோவில்களில் இருந்து காணாமல் போயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வீர பகத்சிங்.. கோழை சாவர்க்கர்
இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு, விடுதலைக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் போராடினார்கள் என ஒரு சான்று காட்ட முடியுமா? நீங்கள் கொண்டாடுகிற சாவர்க்கர் 2 முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த கடிதத்தை நான் காட்டட்டுமா? வெள்ளையரிடம் மன்னிப்பும் பென்சமுன் கேட்ட கோழை சாவர்க்கர் எங்கே? மன்னிப்பு கடிதம் வரும் என காத்திருந்த வெள்ளையருக்கு துப்பாக்கி அல்லது பீரங்கியால் சுடு என கடிதம் அனுப்பிய வீர பகத்சிங் எங்கே?. இவ்வாறு சீமான் கூறினார்.