“சபாஷ்”.. சரியான முடிவு.. ஆர்எஸ்எஸின் கலவர “ப்ளான்”! ஐயா ஸ்டாலினுக்கு நன்றி.. துணை நிற்போம் - சீமான்
சென்னை: அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்துக்கு தடை விதித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிடகோரி சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு அண்மையில் உத்தரவிட்டது.
காந்தி பிறந்தநாளும், அம்பேத்கர் நினைவுநாளுமான அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் 51 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழகத்தில் தடை..சரியான முடிவு..முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு
போராட்டங்கள்
இதற்கிடையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனைகளும் அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாலும் தமிழ்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
விடுதலை சிறுத்தைகள் பேரணி
இதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமூக நல்லிணக்க பேரணியை தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு மதசார்பற்ற கட்சிகள், இடதுசாரி கட்சிகள், நாம் தமிழர், இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. நாளுக்கு நாள் திருமாவளவனின் பேரணிக்கான ஆதரவு பெருகி வந்தது.
அனுமதி மறுப்பு
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்து இருக்கின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை, பெட்ரோல் குண்டுவீச்சு உட்பட பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊரவலகத்து அனுமதி வழங்க முடியாது என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சீமான் வரவேற்பு
இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துல்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்!
துணை நிற்போம்
இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.