Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சி தான் தெய்வங்களையும் பாதுகாத்து.. தெய்வங்களின் சொத்துக்களையும் பாதுகாக்கிறது! -சேகர்பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சி தான் தெய்வங்களையும் பாதுகாத்து, தெய்வங்களின் சொத்துக்களையும் பாதுகாக்கிறது என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். அதன் விவரம் வருமாறு;

Sekar Babu has said that DMK government is protecting the gods and protecting the properties of the gods

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முதுவதும் உள்ள திருக்கோயில்கள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கும் வகையில் "குறைகளை பதிவிடுக" என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். அதன்மூலம் பெறப்பட்ட புகார்களை சம்பந்தப்பட்ட இணை ஆணையர்களுக்கு அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அடங்கிய 4 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

48 முதுநிலை திருக்கோயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்து, வழிபாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள் சம்பந்தமாக குறைகள் கண்டறியப்பட்டால் அவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரை தலைவராக கொண்டு இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாவட்டங்களிலுள்ள திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்திடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் 38 வருவாய் மாவட்டங்களிலும் மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 9 கலைக் கல்லூரிகள், ஒரு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, 25 பள்ளிகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்காக உயர்மட்ட கல்விக்குழுவினை உருவாக்கியிருக்கின்றோம். அந்த வகையில் அக்கல்வி நிறுவனங்களில் பயிலும் 25 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு உயர்தர கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தந்துள்ளோம்.

அதேபோல திருவிழா காலங்களில் குறிப்பாக திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா, பழனி தைப்பூசம், பங்குனி உத்திரம், மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், ஸ்ரீரங்கம், வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்ற போது அதற்கான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து பக்தர்கள் சிறப்பான முறையில் தரிசனம் செய்திட உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

அண்மையில் நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது ஒரே நாளில் 8 லட்சம் பக்தர்களும், கந்த சஷ்டி விழா நடைபெற்ற ஏழு நாட்களிலும் சுமார் 20 லட்சம் பக்தர்களும் வருகை தந்தார்கள். அத்திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தாலும் 26 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு சுமார் 30,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இத்தனை லட்சம் பக்தர்கள் கூடிய அந்நிகழ்வில் சிறு அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தந்த ஆட்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியாகும்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டம் (Master Plan) ஏற்படுத்தப்பட்டு 15 திருக்கோயில்களில் ரூ.1,462 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகளும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மட்டும் திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரர் பங்களிப்புடன் சேர்த்து ரூ.300 கோடிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் பிரமிக்கும் வகையில் ஒருங்கிணைந்த வரைவு திட்டத்தில் பணிகளை செய்து வருகிறோம்.

முதலமைச்சர் அவர்கள், 1,000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022-2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023 - 24 ஆம் ஆண்டிற்கு ரூ.100 கோடியும் ஆகமொத்தம் ரூ.200 கோடியினை அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். ஒருகால பூஜை திட்டத்தில் திருக்கோயில்களுகான வைப்பு நிதி ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் அவர்கள் ரூ.129 கோடியினை ஒரே தவணையில் அரசு மானியமாக வழங்கினார்கள். தற்போது ஒருகால பூஜை திட்டத்தில் 17 ஆயிரம் திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக ரூ.200 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.1,000 இவ்வரசு பொறுப்பேற்றபின் முதன்முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

கிராமப்புற திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற திருக்கோயில்கள், 2,500 ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியிலே இருக்கின்ற திருக்கோயில்கள் என ஆகமொத்தம் 5,000 திருக்கோயில்களின் திருப்பணிக்கு ரூ. 100 கோடி நிதியுதவியாக வழங்கியவர் முதலமைச்சர் அவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வந்த அரசு மானியம் 3 கோடி ரூபாயை 6 கோடி ரூபாயாக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதற்கான காசோலையை கடந்தாண்டு வழங்கினார்கள். தற்போது அரசு மானியத்தை ரூ.8 கோடியாக உயர்த்தி வழங்கவுள்ளார்கள். அதேபோல புதுக்கோட்டை தேவஸ்தான 227 திருக்கோயில்களுக்கான அரசு மானியம் ஒரு கோடியிலிருந்து மூன்று கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அது தற்போது ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. மேலும், தஞ்சாவூர் தேவஸ்தான 88 திருக்கோயில்களுக்கு இதுவரை அரசு மானியம் வழங்கப்படாத நிலையில் முதன்முதலில் ரூ.3 கோடியை அரசு மானியமாக வழங்கியவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

இந்து சமய அறநிலையத்துறை ஆற்றி இருக்கின்ற பணிகளை சொல்ல வேண்டுமெனில் ஒரு நாள் போதாது. அந்த வகையில் பல்வேறு சாதனைகளை, ஆன்மிக புரட்சிகளை இந்த ஆட்சி செய்து கொண்டு வருகின்றது. "காய்த்த மரத்தில் தான் கல்லடி படும்" என்பார்கள். தமிழகத்தை பொறுத்தளவில் ஒன்றிய அரசு, இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்த ஆட்சி என்பதை போல ஒரு பிம்பத்தை உருவாக்க முற்பட்டார்கள். இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரையில் செய்யப்படாத பல்வேறு சாதனைகளை செய்து வருகின்ற ஆட்சி முதல்வர் தலைமையில் அமைந்திருக்கின்ற ஆட்சி.

முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகுதான் திருக்கோயில்களுக்கு சொந்தமான சுமார் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து இருக்கின்றோம். அதேபோல 1,165 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தி இருக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் 8,001 திருக்கோயில்களில் மாநில வல்லுநர் குழுவால் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். கடந்த கால ஆட்சியில் 5 ஆண்டுகளில் 1,500 திருக்கோயில்களுக்குதான் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.200 கோடி மானியம் வழங்கிய ஆட்சி இந்த ஆட்சி.

அதே போல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் கடத்தப்பட்ட சிலைகள், கலைப் பொருட்கள், உலோகத் திருமேனிகள் என 400 இனங்கள் இதுவரையில் மீட்டப்பட்டிருக்கின்றன. உலோகத் திருமேனிகளை பாதுகாப்பதற்கு ரூ.162 கோடி மதிப்பீட்டில் 1,843 பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில் 250 உலோக திருமேனி பாதுகாப்பு அறைகள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன. இப்படி தெய்வங்களையும் பாதுகாத்து, தெய்வத்திற்கு சொந்தமான இடங்களையும் பாதுகாத்து ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து, திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்தி வரும் இந்த ஆட்சி இறை சொத்தை மீட்கின்ற ஆட்சி தானே தவிர இறை சொத்துக்களை களவாடுவதற்கு உதவுகின்ற ஆட்சி இல்லை என்பதை உயர்ந்த பொறுப்பிலே இருக்கின்ற அந்த அம்மையாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமய அறநிலையத்துறை மீது யார் குற்றம் சாட்டினாலும், அதற்கு வெளிப்படைத்தன்மையோடு பதில் கூற துறை தயாராக இருக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்டதிலிருந்து இது இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சித்தார்கள். அதில் அவர்கள் நினைத்தது போல் எள்ளளவும் வெற்றியடைய முடியவவில்லை, படுதோல்வியே அடைந்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த துறையின் சார்பில் நடைபெற்ற 54 நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்துள்ளாகள். நாளைய மறுதினம் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 1,100 வது இணைகளுக்கான திருமணங்களை நடத்தி வைக்கவுள்ளார்கள். ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆன்மீகத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைப்பதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்துக்களின் ஓட்டு ஒன்றுகூட தங்கள் பக்கம் வராது என்று நம்பிக்கையை இழந்துவிட்ட காரணத்தால், தொடர்ந்து இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார்கள்.

எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக அவர்கள் கேட்டால் அதற்குண்டான விளக்கமும், தவறு நடந்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் எல்லா காலங்களிலும் தயாராக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தெய்வங்களுக்கு உண்டான அனைத்து திருவிழாக்களும் மகிழ்ச்சியோடு நடைபெற்று வருவதை பொறுத்துக் கொள்ள முடியாததால் தான் இப்படிப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இந்த அவதூறுகளை கண்டு சற்றும் சளைக்காமல் மேலும் முன்பை விட அதிக வேகத்தோடு இறையன்பர்களுக்கும் திருக்கோயில்களுக்கும் செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் முனைப்போடு இந்த ஆட்சி செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இதுவரையில் துறைக்கு ரூ.621 கோடி அரசின் சார்பில் மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது. திருக்கோயில்களின் உண்டியல் பணம் மற்றும் திருக்கோயிலைச் சார்ந்த இடங்களில் வருகின்ற வருவாய்க்கு அப்பாற்பட்டு இதுபோன்று அரசின் சார்பிலும் அதிகமான மானியம் வழங்கிய ஒரே ஆட்சி இதுவே ஆகும். கடந்த காலங்களில் ஒப்பிட்டு பார்த்தால் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற இந்த ஆட்சியில் தான் மானியங்கள் அதிகமாக இந்து சமய அறநிலையத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்பது புலனாகும்.

திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் கடந்தாண்டு 32 லட்சம் பக்தர்கள் மகா தீபத்திற்கு வருகை தந்திருந்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற திருவிழாக்களின்போது முன்னரே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் கடந்தாண்டு செய்யப்பட்டிருந்த அனைத்து ஏற்பாடுகளினால் சிறு குறையை கூட காண முடியவில்லை. அதேபோல இந்தாண்டு நடைபெறவுள்ள தீபத்திருவிழாவிற்கு அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும், நானும் இணைந்து மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்தாண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 14,000 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 16 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 36 இடங்களில் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. நேற்றைய தினம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தலைமையில் அருணை தூய்மை பணி அமைப்பின் சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் கிரிவல பாதையை தூய்மைப்படுத்தி இருக்கின்றார்கள். பௌர்ணமி தினங்களில் ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும் அனைத்து வசதிகளையும் கடந்த ஆண்டை விட இந்தாண்டு இருமடங்காக்கி இறை தரிசனத்திற்கும், பௌர்ணமி கிரிவலத்திற்கும், தீப தரிசனத்திற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை மதித்து, அதனை உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சியாகும். உதாரணத்திற்கு திருக்கோயிலில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும் பழனியிலும் செல்போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அறங்காவலர்களை நியமிப்பது முதல் இந்து சமய அறநிலையத்துறையில் புதிய பணியிடங்களை நிரப்புவது, தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கின்ற பதவிகள் வரை அனைவரும் இந்துக்கள் தான். இந்துக்கள் அல்லாத ஒருவரைக் கூட எந்த பதவிலும் இதுவரை நியமித்ததில்லை. அறங்காவலர் பதவிகளில் இந்துக்கள் அல்லாத ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை. அரசியல் அப்பாற்பட்டு யாரால் திருக்கோயிலுக்கு நன்மைகள் கிடைக்குமோ அவர்களை தான் இந்த அரசு அறங்காவலர்களாகவும், அறங்காவலர் குழு தலைவராகவும் நியமித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்துக்கள் அல்லாத யாரையும் இந்த துறையில் அறங்காவலர்களாகவோ, நியமன பதவிகளிலோ நியமிக்கப்படவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

38 மாவட்டங்களுக்கும் மாவட்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு விட்டது. அதேபோல் முதுநிலை திருக்கோயில்கள் 80 மேற்பட்ட கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(2), 46(1) மற்றும் 49(1) ஆகியவற்றின் கீழ் இருக்கின்ற திருக்கோயில்களில் 5,000க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பிற திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த நியமனங்களில் எந்த விதமான தவறும் நடைபெற கூடாது என்பதற்காக அதிக கவனம் செலுத்துவதால் சற்று தாமதம் ஏற்படுகின்றது. வரும் காலங்களில் அப்பணிகளை விரைவுபடுத்தி அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க, சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூன்று அலுவலர்களையும். தொல்லியல் துறையின் சார்பில் மூன்று அலுவலர்களையும் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது, வெகு விரைவில் அந்த குழு சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+